ராகுல் எதற்காக கட்டிப் பிடித்தார் ? மோடி உடனடியாக மெடிக்கல் டெஸ்ட் பண்ணிக் கொள்ள வேண்டும்… சர்ச்சைக் கருத்தை கூறிய அதிரடி அரசியல்வாதி…
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டித் தழுவியதால் பிரதமர் மோடி கண்டிப்பாக மருத்துவம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் பாஜக எம்.பி. சுப்ரமணியன்சாமி வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி மக்களவையில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது. . இத்தீர்மானத்திற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்தார். அவர் பேசி முடிக்கும்போது, தன்னைச் சிறுவன் எனப் பிரதமர் மோடி நினைத்தாலும், நான் அவரை வெறுக்கவில்லை என்று கூறி, பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டித் தழுவினார். பிரதமர் மோடியும் ராகுலை அழைத்துக் கைகொடுத்தார்.
ராகுல்காந்தியின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, எல்லோர் முன்னிலையிலும் ராகுல்காந்தி திடீரென பிரதமரை கட்டித்தழுவியிருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் உள்ளேயே பிரதமருக்கு பாதுகாப்பு இல்லை. இச்செயல் முற்றிலும் நியாயமற்றது. இது போன்ற செயல்களை கட்டாயமாக ஆதரிக்க கூடாது. மேலும் எதிர்காலங்களில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என கடுமையாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணிய சாமி, ராகுல் தம்மைக் கட்டிப்பிடிக்கப் பிரதமர் மோடி அனுமதித்திருக்கக்கூடாது என்றும், ரஷ்யர்களும், வட கொரியர்களும் மற்றவர்கள் மீது விஷ ஊசியைச் செலுத்த, இந்த முறையைத்தான் கடைப்பிடிப்பார்கள் என சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்தார்.
இதனால பிரதமர் மோடி, வெகு விரைவாக மருத்துவமனை சென்று, தம் மீது ஏதாவது விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கிறதா என்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சுப்ரமணியன்சாமியில் இந்த கடுமையான , சர்ச்சைக்குரிய பேச்சால் காங்கிரஸ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல பொது மக்களும், அரசியல் விமர்சகர்களும் சு.சாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.