எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சிக்கின... அதிமுக தொண்டர்கள் தடுப்புகளை தூக்கி வீசி ஆவேசம்
கோவை, சென்னையில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. வேலுமணி வீட்டிற்கு அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் விரைந்தனர்.
எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; சென்னை, கோவையில் ஹார்ட் டிஸ்க் மற்றும் முக்கிய வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எஸ்.பி வேலுமணியின் சென்னை, அபிராமபுரத்தில் உள்ள ஆடிட்டர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை வடவள்ளியில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. வேலுமணி உறவினர் சந்திரசேகர் வீட்டில் வரவு, செலவு புத்தகம் உள்பட ஆவணங்கள் சிக்கின. கோவை மாவட்ட எம்ஜிஆர் அணி நிர்வாகியாக உள்ளார் சந்திரசேகர். கோவையில் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கொடுத்த ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்தப்புகாரில் 2014ம் ஆண்டு தமிழகத்தின் உள்ளாட்சி துறை அமைச்சராக எஸ்பி வேலுமணி பொறுப்பேற்றார். இவரது நிர்வாகத்தின் கீழ் தான் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் கோவை மாநகராட்சி ஆகியவை இருந்தன.
2014 முதல் 2018ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கான ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடாக தர அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார். இதேபோல் கோவை மாநகராட்சிக்கான அரசு ஒப்பந்தங்களையும் நெருக்கமானவர்களுக்கு தருவதற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார். எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு 464 கோடி முறைகேடு 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 464.02 கோடி ரூபாய் அளவிற்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களும், 346,81 கோடி மதிப்பிலான கோவை மாநகராட்சி ஒப்பந்தங்களும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கி உள்ளார்.
திமுக புகார் தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம் 1998 ன் கீழ் தவறு. 2012ல் கொண்டுவரப்பட்ட டெண்டர் ரூல் படியும் தவறு. இந்த விவகாரத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் புகாரின் பேரில் எஸ்.பி.வேலுமணியுடன், பி.அன்பரசன், கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ், கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் பங்குதாரர் சந்திரசேகர், எஸ்பி பில்டர்ஸ் நிறுவனர் முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, தி ஏக் டெக் மெசினரி காம்பணன்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட், கான்ஸ்ட்ரானிக்ஸ் இன்ப்ரா லிமிடெட், கான்ஸ்ட்ரோமலி குட் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ், ஆலயம் பவுண்டேசன்ஸ் பிரைவேட் லிமிடெட், வைதுர்யா ஹோட்டல்ஸ், ரத்னா லக்ஷமி ஹோட்டல்ஸ் பி லிமிடெட், ஆலம் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ், ஏசூர் இஎஸ்பிஇ இன்ப்ரா, கு ராஜன் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி வீட்டு முன்பாக அதிமுகவினர் குவிந்தனர். போலீசாருடன் அதிமுக தொண்டர்கள் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது.
கோவை, சென்னையில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. வேலுமணி வீட்டிற்கு அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் விரைந்தனர்.