இனி பள்ளிகளில் மதமாற்றம் என்ற புகார்கள் வந்தால் அதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

இனி பள்ளிகளில் மதமாற்றம் என்ற புகார்கள் வந்தால் அதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மதமாற்றம் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விதிகளை உருவாக்குவதில் அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சமீபகாலமாக குறிப்பாக மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் ஆங்காங்கே மதமாற்றம் நடைபெறுவதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளியில், கிறிஸ்தவ பள்ளியில் மதமாற்றம் செய்ய முயற்சித்ததுதான் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது ஆனால் மதமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. ஜெகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மிஷனரிகள் தொடர்ந்து மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், அதன் காரணமாகவே தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அதை விசாரிக்க சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது என்று சுட்டிக்காட்டினார்.

அதாவது அரசின் ஆதரவுடன் கிறிஸ்தவ மிஷனரிகள் செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதேபோல ஏப்ரல் 12ஆம் தேதி அரசு கட்டுப்பாட்டிலுள்ள கன்னியாகுமரியில் உள்ள பள்ளி ஒன்றில் மதமாற்ற விவகாரத்தில் மாணவியை முட்டி போடச் செய்த விவகாரத்தில் பள்ளி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார், குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அந்த விஷயத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. எனவே மத ரீதியிலான செயல்பாடுகளில் கல்விநிறுவனங்கள் ஈடுபடக்கூடாது என நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் அறிவித்திருந்தாலும் தமிழகத்தில் மிஷனரிகளுக்கு ஆதரவான அரசு அமையும் போதெல்லாம் இந்துக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல் தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜாமீனில் விடுதலையான போது ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அவரை வரவேற்றார், எனவே மிஷனரிகளுக்கு ஆதரவாகவும் கல்வி நிறுவனத்துக்கு ஆதரவாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்பது அதன் மூலம் நிரூபணமாகியுள்ளது என குறிப்பிட்டார்.

எனவே மாநில அரசும் நடுநிலையுடன் செய்யப்பட வேண்டியது அவசியம் உள்ளது எனவே வலியுறுத்தி இருந்தார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க விதிகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் ஆனந்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சம்பவங்களை தொடர்ந்து வேறு எந்த பள்ளியிலும் இது போன்ற புகார்கள் எழவில்லை அவ்வாறு ஏதும் புகார்கள் வந்தால் அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதே நேரத்தில் எந்தப் பள்ளியில் எந்த வகையில் மதமாற்ற முயற்சி நடந்தது என்ற விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றார், அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மனுதாரர் கோரியபடி வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஏன் வழங்க கூடாது என்றும், அதை வெளியிடுவதில் அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கை விரிவான விவாதிப்பதற்காக நாளைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.