இஸ்லாமிய நாடுகள் இந்திய அரசிற்கு காட்டியிருக்கும் எதிர்வினை மிக அவசியமான ஒன்று. ஆனால், இதை வைத்து இந்திய முஸ்லீம்களை இஸ்லாமிய நாடுகள் பாதுக்காக்கும் என்ற அசட்டு நம்பிக்கையை எந்த இஸ்லாமியரும் கொள்ளத் தேவையில்லை என்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மனுஷ்யபுத்திரன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பாஜகவின் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டாலை கைது செய்யவேண்டும் என நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தப் போராட்டங்கள் பாஜக - ஆர்எஸ்எஸ் திட்டங்களுக்கு உதவுவதில்தான் போய்முடியும் என்று அஞ்சுகிறேன். டெல்லி ஜமா மசூதி அருகில் நடந்த போராட்டத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மசூதியின் ஷஹி இமாம் அப்துல் புகாரி தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் ஒவைஸியின் கட்சி இருக்கலாம் என்று தெரிவிக்கும் அவர், இந்தப் போராட்டங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும் இல்லாவிட்டால் இதற்கான விலையை இஸ்லாமியர்கள்தான் கொடுக்க நேரிடும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

நபிகள் நாயகத்திற்கு எதிரான பாஜக செய்தித் தொடர்பாளர்களின் வெறுப்புப் பேச்சை இஸ்லாமிய நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. பாஜக தன் வெறுப்பு அரசிலுக்கான எதிர்வினையை முதன்முதலாக சர்வதேச அளவில் சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இதை இந்துத்துவாவாதிகள் ஏதோ இஸ்லாமிய நாடுகள் இந்தியாவை முற்றுகையிடுவதுபோன்ற ஒரு பிம்பத்தை இங்குள்ள இந்துக்களிடம் விதைக்க முற்படுகின்றனர். அதோடு இந்தப் போராட்டங்களும் சேர்ந்தால் இந்திய முஸ்லீம்கள் இஸ்லாமிய நாடுகளோடு சேர்ந்துகொண்டு போராடுவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துவார்கள். இந்துத்துவா தேசிய வெறியை பற்றி எரியச்செய்ய புதிதாக ஒரு பெட்ரோல் கிடைத்தது போலாகிவிடும். ஏற்கனவே அதற்கான வேலைகள் துவங்கிவிட்டன.

இஸ்லாமிய நாடுகள் இந்திய அரசிற்கு காட்டியிருக்கும் எதிர்வினை மிக அவசியமான ஒன்று. ஆனால், இதை வைத்து இந்திய முஸ்லீம்களை இஸ்லாமிய நாடுகள் பாதுக்காக்கும் என்ற அசட்டு நம்பிக்கையை எந்த இஸ்லாமியரும் கொள்ளத் தேவையில்லை. கடந்த கால் நூற்றாண்டாக இஸ்லாமியர்கள் இந்தியாவில் பல்வேறு ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகிறோம். நமக்காக எந்த இஸ்லாமிய நாடும் குரல் கொடுத்ததில்லை. இப்போது அந்த நாடுகள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் காட்டும் எதிர்வினைக்கு நாம் மிகவும் உணர்ச்சி வசப்படுவது நம்மை அன்னியப்படுத்துவதாகவே அமையும். 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான எதிர்ப்பு, ஹிஜாப் தடைக்கான எதிர்ப்பு போன்றதல்ல இந்தப் போராட்டம். இந்தப் போராட்டத்தை வெகு எளிதாக இல்லாமியர்களை தனிமைப்படுத்தும் ஒன்றாக இந்துத்துவர்கள் மாற்றிவிடுவார்கள். ஒவைஸி இந்தப் போராட்டங்களுக்குப்பின் இருக்கிறார் என்றால் அவர் பாஜகவின் அஜெண்டாவிற்கு வேலை செய்கிறார் என்பதை புரிந்துகொள்ள எந்த விஷேச அறிவும் தேவையில்லை. இந்தப் போராட்டத்தைப் பின்னிருந்து இயக்குபவர்கள் இஸ்லாமிய சமூகத்தை பெரும் அபாயத்திற்கு தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே என் தனிப்பட்ட கருத்து” என மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார்.