sterlite protest support kannada peoples

ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் கர்நாடகத்தில் இவ்வளவு எதிர்ப்பைச் சம்பாதிப்போம் என்று கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஆமாம், காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையே இரு மாநிலங்களிலும் உள்ள சிற்சில அமைப்புகளால் வெறுப்புணர்வு பல வருடங்களாக தூண்டப்பட்டுவந்திருக்கிறது. இதற்கு இலக்காகி பெங்களூருவில் பல தமிழர்கள் தாக்கப்பட்டு, தமிழர்களின் உடைமைகளும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தப் நிலையில், தூத்துக்குடியில் நடந்த கொடூரத் துப்பாக்கிச் சூட்டுக்குக் கண்டனம் தெரிவித்து கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள் கன்னடர்கள். மொழி தாண்டிய மனித நேயத்துக்கான அடையாளமாக இந்த போராட்டம் ஒட்டுமொத்தமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது .

”ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தாவின் அலுவலகம் பெங்களூரு எம்.ஜி சாலையில் உள்ள ப்ரெஸிடீஜ் மெரிடியன் என்ற வணிக வளாகத்தில் செயல்படுகிறது. வேதாந்தாவுக்கு எதிராகவும், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று மதியம் மதியம் மூன்று மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். சுமார் ஐம்பது முதல் நூறு பேர் வரைக்கும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த போரட்டத்தில் தமிழக அரசு, காவல்துறை, மத்திய அரசு, அரசியல் காட்சிகள் என சகலரையும் விளாசினார்கள். அங்கு இருக்கும் போலீசார், மற்றும் நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் மக்கள், சம்பந்தமேயில்லாமல் இந்த கட்டிடத்தில் எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்று முதலில் குழப்பமாக இருந்தது. ஆனால் கூகுள் மேப்பில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தாவின் அலுவகம் இன்னமும் அங்கே இருப்பதாகத்தான் காட்டுகிறது.

ஆனால், இரண்டரை மாதத்துக்கு முன்பாகவே அவர்கள் காலி செய்துவிட்டுப் போய்விட்டதாக அந்த பில்டிங்கில் உள்ள சிலர் வந்து சொன்னார்கள். அது பெங்களுரு நகரத்தின் முக்கியமான பகுதி என்பதால் இந்த போராட்டம் கவனம் பெரும் என்ற நிக்கதில் அங்கு தொடர்ந்து நடந்தது.

இந்நிலையில், கட்டிடத்தின் மேல் தளங்களில் நின்று வேடிக்கை பார்த்தவர்களிடம் ஆவேசமாக பேசிய போராட்டக்காரர் 'நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்கள் என்று தெரியும்.. நாங்கள் வன்முறையாளர்கள் இல்லை... உங்களிடம் ஒன்று சொல்வதற்காக வந்திருக்கிறோம். உங்கள் பாதங்களுக்கு கீழாக அங்கே சுடப்பட்டவர்களின் இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது' என பேசியபோது மீடியாக்கள் குவிந்தது.