முழு ஊரடங்கை கடைசி ஆயுதமாக மாநில அரசுகள் பயன்படுத்தலாம்... பிரதமர் மோடி அதிரடி சரவெடி..!
தங்களின் உயிரைப் பணையம் வைத்துப் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தங்களின் உயிரைப் பணையம் வைத்துப் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகவேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனால், பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி, படுக்கை வசதி இல்லாமல், தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து மாநில அரசுகளுடனும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடனும் பிரதமர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, அவர் பேசுகையில்;- இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் நாம் இன்று மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளோம். கொரோனாவால் தங்களின் நெருக்கமானவர்களை இழந்து நிற்கும் மக்களின் வலியை நான் புரிந்து கொள்கிறேன். அவர்களின் துயரத்தில் நான் துணை நிற்கிறேன். ஆனால், இந்த பாதிப்பில் இருந்தும் நம்மால் மீண்டு வர முடியும். நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை நிச்சயமாக முறியடிக்க முடியும்.
கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுனர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என முன்களப் பணியாளர்கள் பலரும் பாடுபடுகின்றனர். தங்களின் உயிரைப் பணையம் வைத்துப் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும். முன்களப் பணியாளர்களுக்கு என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தச் சூழலிலும் பொறுமையை இழந்துவிடக் கூடாது.
கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டை நிச்சயமாக அரசு பூர்த்தி செய்யும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது மருந்து உற்பத்தி பலமடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவ உபகரணங்களைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு இருந்த மோசமான சூழ்நிலை இப்போது இல்லை.
மே 1ம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டோரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஏழைகள், நடுத்தரப் பிரிவினருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணி தொடரும். போர்க்கால அடிப்படையில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி நடைபெறும். பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் உயிர்களைக் காக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் முயற்சி. புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது உள்ள இடத்திலேயே இருக்கும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படாது.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் பொறுப்பும் அதிகரித்துள்ளது. அது தொடர வேண்டும். தேவையில்லாமல் வெளியில் வருவதை முடிந்தவரை தவிர்க்கலாம். இயன்றவர்கள் வீட்டிலிருந்து பணி புரியலாம். முழு ஊரடங்கு சூழல் மீண்டும் வராமல் தடுப்பது மக்களின் கைகளில்தான் உள்ளது. முழு ஊரடங்கு என்பது கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கடைசி ஆயுதம். இதனை கடைசி ஆயுதமாக மாநில அரசுகள் பயன்படுத்தலாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.