மாநில சுயாட்சியே திமுகவின் அடிநாதம்.. ஓங்கி ஒலிக்கும் ஸ்டாலின்.. அதிரும் இந்தியா..
திமுக தொடங்கப்பட்ட காலம் தொட்டே அதன் அடிநாதமாக இருந்து வருவது சமூகநீதி மாநில சுயாட்சி ஆகும். காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து மாநில சுய ஆட்சியில் உறுதியாக இருந்து வருகிறது திமுக.
திமுக தொடங்கப்பட்ட காலம் தொட்டே அதன் அடிநாதமாக இருந்து வருவது சமூகநீதி மாநில சுயாட்சி ஆகும். காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து மாநில சுய ஆட்சியில் உறுதியாக இருந்து வருகிறது திமுக. திமுக காங்கிரசை வீழ்த்தியதற்கு மாநிலசுயாட்சி என்ற முழக்கத்திற்கு பெரும் பங்கு உண்டு. ஒவ்வொரு முறையும் மத்திய அரசு மாநில அரசின் உரிமையில் தலையிடும் போது திமுக தலைவர்கள் வெகுண்டெழுந்து மாநில உரிமைகளை பாதுகாத்துள்ளனர். மாநில சுயாட்சிக் கொள்கையை அப்போதைய முதல்வர் கருணாநிதி ஜெயலலிதா அவ்வப்போது நினைவுபடுத்தி வந்தாலும் அதை வலுவாக செயலாற்ற திட்டம் தேவை அப்போது எழவில்லை. அதற்கு காரணம் திமுகவுக்கு அந்த அளவிற்கு நெருக்கடி ஏற்படவில்லை. ஆனால் தற்போது ஆளுநர் தமிழக ஆட்சியை இடையூறு செய்யும் சக்தியாக மாறி உள்ளதால். மீண்டும் மாநில சுயாட்சியை கையில் எடுத்துள்ளது திமுக.
ஆளுநர் ஆய்வு திமுக கருப்பு கொடி:-
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்திற்கு ஆய்வுப் பணிக்காக சென்றபோது அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்றனர். திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, பலர் சிறை படுத்தப்பட்டனர், இதனை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்காக போராட்டத்தில் இறங்கினார். ஆளுநர் மாளிகை முற்றுகை இடப்பட்டது, ஆளுநருக்கு எதிரான திமுக போராட்டம் வலுத்தது, ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆளுநர் மாளிகை எச்சரித்தது. ஏழு ஆண்டுகள் அல்ல ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று சொன்னாலும் மாநில சுயாட்சிக்காக திமுக சிறைக்குச் செல்லும், திமுகவினர் அதற்கு தயாராக இருக்கிறார்கள் என அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலின் முழங்கினார்.
அத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு பணிக்கு செல்வதை நிறுத்திக் கொண்டார். அப்போது ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் மாநில சுயாட்சிக்கு முதல்முதலில் இந்தியாவிலேயே தீர்மானம் கொண்டு வந்தது கருணாநிதி முதலமைச்சராக இருந்த நேரத்தில்தான். ஆட்சியில் அதிமுக இருந்தாலும் சரி அது திமுகவாக இருந்தாலும் சரி ஒரு மாநில அரசின் உரிமைகளை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க திமுக தயாராக இல்லை என ஸ்டாலின் அப்போது உறுதிபடத் தெரிவித்தார். மாநில அரசுக்கான ஒவ்வொரு உரிமைகளையும் மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது அதிகார மையமாக மத்திய அரசு மாறிவருகிறது, இந்நிலையில் ஸ்டாலின் மாநில சுயாட்சி என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறார். அதன் வெளிப்பாடாகவே அவரின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அமைந்து வருகிறது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்:
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பது திமுகவின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தவர்கள் கல்வியை ஒன்றிய பட்டியல், மாநில பட்டியல் அல்லது பொதுப் பட்டியலில் சேர்ப்பது என்பது பற்றி நீண்ட விவாதத்துக்குப் பிறகு இறுதியில் கல்வி மாநிலப் பட்டியலில் இருப்பதே சரி என்று மாநிலப்பட்டியலில் சேர்த்தனர். ஆனால் கல்வி மத்திய அரசு தன்வயப்படுத்தி கொண்டது. இதன் விளைவாகவே அத்துறையில் மத்திய அரசு தற்போது புதிய புதிய சட்டங்களை கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதில் ஒன்றுதான் நீட் தேர்வு, நீட் தேர்வால் மாணவர்களின் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது, அத்தேர்வால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு கானல் நீராக மாறியுள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி, தற்போது குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பது திமுகவின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.
நீட் தேர்வு திமுக அரசின் சட்ட போராட்டம்:
நீட் தேர்வு ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கிறது என்றும், நீட் தேர்வால் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது, அதேபோல் இத்தேர்வால் தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலைக்கு ஆளாகின்றனர் என்பன உள்ளிட்ட சமூகக் காரணங்களை கருத்தில் கொண்டு, இந்தத் தேர்வு சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும், சமத்துவத்துக்கும் எதிரானதாக உள்ளது என ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் இரு முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானம் தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் முடிவுக்காக காத்திருக்கிறது. எழை எளிய கிரமப்புற மாணவர்களின் நலனில் அக்கறையில் கொண்டு ஸ்டாலின் தலைமையிலான உறுதியாக நின்று அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கை சமூக நீதி நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம்:
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் மாநிலத்தின் உரிமையை மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என தொடர்ந்து மாநில அரசு குற்றம் சாட்டி வருகிறது. ஆளுநரின் இந்த நடவடிக்கை மாநில அரசுகளுக்கான உரிமைகளை பறிக்கும் செயல் என ஸ்டாலின் அரசு தொடர்ந்து எச்சரித்து வந்தது. மாநில பல்கலைக் கழகங்களில் மாநில அரசை துணைவேந்தர்களை நியமிக்க ஏதுவாக பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டுவரும் சட்ட முடிவை சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழக உயர் கல்வியில் 13 பல்கலைக்கழக செயல்படுகின்றன, இந்த பல்கலைக் கழகங்களில் வேந்தராக ஆளுநரும் இணை வேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சரும் செயல்படக்கூடிய நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிக்க கூடிய அதிகாரம் மாநில அரசுக்கு இல்லாமல் இருப்பது உயர்கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலந்தாலோசிக்காமல் துணைவேந்தர் தன்னிச்சையாக துணை வேந்தர்களை நியமிப்பது மரபு மீறிய செயலாகும். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆளுநர் துணைவேந்தர் நியமனத்தில் தனக்கு மட்டுமே உரிமை உள்ளது போன்று செயல்பட்டு வருகிறார். இந்தப் போக்கை கண்டிக்கும் வகையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் அதன் கீழ் செயல்படும் பல்கலைகழக துணைவேந்தர்களை நியமிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கர்நாடகா தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மாநில அரசு துணைவேந்தர்களை நியமிக்கும் வகை உள்ளது அது போல தமிழ்நாட்டில் மாநில அரசால் துணை வேந்தர்களை நியமிக்க இந்த மன்றத்தில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என உரையாற்றினார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை மாநில சுயாட்சியை ஒங்கி ஒலிப்பதுடன் அதை உறுதி செய்யுத் நடவடிக்கை என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.