ஸ்டாலினுக்கு கிட்டுமா முதல்வர் நாற்காலி? - நம்பிக்கை கோரும் மனு நாளை விசாரணை...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என கோரி ஸ்டாலின் தொடர்ந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் பெரும்பான்மையை இழந்து விட்டார் என்றும், சட்டப்பேரவையில் அவர் தனது அரசின் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளுநரிடம் முறையிட்டுள்ளனர்.
இதனிடையே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை நேரில் சந்தித்து , சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனு அளித்தார்.
இதைதொடர்ந்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டதால் சட்டப் பேரவையை கூட்டி பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரனை நாளை விசாரனைக்கு வர உள்ளது. இதை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விசாரிக்க உள்ளதாக தெரிகிறது.