குட்கா ஊழல் வழக்கை ஸ்டாலின் சும்மா விடுறதா இல்ல..! ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை
குட்கா வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு நேர்மையான, அனுபவமிக்க, வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளை கொண்ட சிபிஐ சிறப்புப் புலனாய்வுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ இயக்குநர் மற்றும் உள்துறை செயலாளருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் தொடர்புடைய குட்கா ஊழல் வழக்கு விசாரணையை, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சிபிஐ அமைப்புக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் முக்கியமான இந்த வழக்கு விசாரணையை நேர்மையாகவும் நியாயமாகவும், விரைவாகவும் நடத்த வேண்டும். மேலும் நேர்மையான, அனுபவமிக்க, வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட சிபிஐ சிறப்புப் புலனாய்வுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
குட்கா விவகாரத்தில், ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் நேர்மையற்ற அதிகாரிகள் என ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்துள்ளதாகவும், இரண்டையும் அப்புறப்படுத்தி, நீதியை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.