தந்தையின் மரணத்தை வைத்து கீழ்த்தரமான அரசியல் செய்யும் ஸ்டாலின்... செல்லூர் ராஜூ தாக்கு!
தந்தை கலைஞரின் மரணத்தை வைத்து மு.க.ஸ்டாலின் கீழ்த்தரமான அரசியல் செய்வதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தந்தை கலைஞரின் மரணத்தை வைத்து மு.க.ஸ்டாலின் கீழ்த்தரமான அரசியல் செய்வதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடியாக குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூவிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கைகளை பற்றிக் கொண்டு கெஞ்சியும் மெரினாவில் கலைஞரை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க மறுத்துவிட்டதாக ஸ்டாலின் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டவர்கள் யார் என்பது உலகிற்கே தெரியும்.
கலைஞர் மரணம் அடைந்த 3 மணி நேரத்திற்குள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது எப்படி? ஸ்டாலின் தனக்கு வேண்டியவர்களை வைத்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தான் கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாமல் போனதற்கு காரணம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கலைஞருக்கு தமிழக அரசால் மெரினாவில் இடம் ஒதுக்க முடியாததற்கு காரணமே ஸ்டாலின் தான்.
வழக்கை வாபஸ் பெற்ற பிறகு உயர்நீதிமன்றம் கலைஞர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கொடுத்தது. முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி அவர்களும் உடனடியாக தமிழக அரசின் சார்பில் அனைத்து உதவிகளையும் செய்து கலைஞர் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. உண்மை இப்படி இருக்க ஸ்டாலின் தான் தனது தந்தையின் மரணத்தை வைத்து கீழ்த்தரமாக அரசியல் செய்வதாக செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டினார்.
மேலும் கலைஞரால் தான் எம்.ஜி.ஆர் சூப்பர் ஸ்டார் ஆக முடிந்ததாக ரஜினி கூறியது பற்றி செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, பெரும் கடனில் தவித்த கலைஞரின் மருமகன் முரசொலி மாறன் தயாரிப்பில் ஒரு படம் நடித்து கொடுத்தவர் ரஜினி. இதன் மூலம் தங்கள் குடும்பமே எம்.ஜி.ஆருக்கு கடன் பட்டுள்ளதாக கலைஞரே பேசியிருப்பதாகவும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். எனவே வரலாறு தெரியாமல் ரஜினி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று பேசி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.