வாழ்நாள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் தண்டனையைக் குறைத்து அவர்களின் நன்னடத்தை, உடல் நிலை, மன நிலை, உடல் ஆரோக்கியம், தற்போது உள்ள சூழ்நிலை என அனைத்தும் அறியும் வகையில்  முன் விடுதலை செய்வது குறித்து பரிந்துரை  

மனிதாபிமான அடிப்படையில் வாழ்நாள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யப் பரிந்துரைக்க ஒய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்த சிறைவாசிகள் விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு கடந்த நவம்பர் 15 அன்று அரசாணை ஒன்றை வெளியிட்டது. இந்த அரசாணையில் முன் விடுதலைக்காக விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பல சிறைவாசிகள் விடுதலையாவது கேள்விக்குறியாக அமைந்திருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



இது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்தவர்கள் விடுதலைச் செய்யப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நேரில் கோரிக்கை வைத்தோம். இதனை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாழ்நாள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் தண்டனையைக் குறைத்து அவர்களின் நன்னடத்தை, உடல் நிலை, மன நிலை, உடல் ஆரோக்கியம், தற்போது உள்ள சூழ்நிலை என அனைத்தும் அறியும் வகையில் முன் விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட அரசாணைகள் மூலம் பயன் பெற முடியாத 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் வாழ்நாள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்ய வழிவகுப்பதற்காக இந்த குழு அமைக்கப்பட்டிருப்பதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த கால பாரபட்சங்களினால் கண்ணீர் நிரம்பிய சிறைவாசிகள் குடும்பத்தினரின் இல்லங்களில் மகிழ்ச்சி சூழ நீதியரசர் ஆதிநாதன் குழு விரைவில் வழிவகுக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இக்குழு விரைந்து குறுகிய காலத்திற்குள் தனது பரிந்துரையை அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.