Stalin warns his party district secretaries

ஆர்.கே.நகரில் ஆளும் அ.தி.மு.க. அணிதான் போட்டியாக இருக்கப்போகிறது! தோற்றாலும் கூட ‘அதிகாரத்தை பயன்படுத்தி ஜெயித்தார்கள்.’ என்று டயலாக் விட்டு டபாய்த்துவிடலாம் என்கிற எண்ணத்தில் இருந்தார் ஸ்டாலின். ஆனால் அதற்குள் லயோலா ராஜநாயகத்தின் கணிப்பு ’இடைத்தேர்தல் ரேஸில் தினகரனே முந்துகிறார்! தி.மு.க.வுக்கு மூன்றாவது இடம் தான் இன்றைய சூழலி.’ என்று பற்ற வைத்து பதற வைத்திருக்கிறார் ஸ்டாலினை. 
இந்த கடுப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில், சொந்த கட்சி பஞ்சாயத்து ஒன்று தளபதியை தாறுமாறாக டென்ஷனாக்கி இருக்கிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதாவது திருநெல்வேலி தி.மு.க.வின் மேற்கு மாவட்ட செயலாளரான சிவபத்மநாபன், தென்காசி சேர்மனிடம் ‘ஐம்பதாயிரம் கொடுங்க! நீங்க எப்படியெல்லாம் முறைகேடா பணம் பண்றீங்க! அப்படிங்கிற லட்சணம் எனக்கு தெரியாதா?’ என்று அதிரடியாய் பேசிய ஆடியோ வாட்ஸ் ஆப்பில் வலம் வந்து தி.மு.க.வை முகம் சுண்ட வைத்தது. இந்நிலையில் இதேபோல் கோயமுத்தூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தமிழ்மணி இதேபோல் வசூல் விஷயமாய் பேசிய ஆடியோ ஒன்றும் வைரலாகி இருக்கிறது. 

தமிழ்மணியின் கேட்டதாக சொல்லி யாரோ ஒரு நிர்வாகி இன்னொரு நிர்வாகியிடம் ஆர்.கே.நகர் தேர்தல் செலவுக்கு பணம் கேட்கிறார். அதற்கு அவரோ ‘இந்த உலகத்துல யாருக்கு வேணாலும் பணம் கொடுப்பேன். ஆனா மாவட்ட செயலாளருக்கு அஞ்சு பைசா கூட கொடுக்க மாட்டேன்! அவரு எனக்கு என்ன பண்ணியிருக்கார்?’ என்று போட்டுத் தாக்குகிறார். இந்த ஆடியோ அப்படியே வாட்ஸ் ஆப்பில் வலம் வந்தது. இதைக் கண்டு டென்ஷனான தமிழ்மணி சம்பந்தப்பட்ட நிர்வாகிக்கு போன் போட்டு ‘நான் உங்ககிட்ட பணம் கேட்டேனா? எதுக்கு அசிங்கப்படுத்துறீங்க?’ என்று நியாயம் கேட்க அப்பவும் அந்த நிர்வாகி தமிழ்மணியை நேரடியாகவே வறுத்தெடுக்கிறார். ‘இந்த மாவட்டத்துல கட்சி பிரச்னைகளை சரி பண்ணலேன்னா நீங்க எந்த தொகுதியில நின்னாலும் ஜெயிக்க முடியாது. எழுதி வெச்சுக்குங்க.’ என்று வகுந்திருக்கிறார். 

இந்த ஆடியோவும் அடுத்தடுத்து வாட்ஸ் ஆப்பில் வைரலாகி இருக்கிறது. தி.மு.க.வுக்கு பெரும் தலை குனிவு.

இந்த தகல்வல்கள் ஸ்டாலினின் காதுகளுக்குப் போயி, அவரும் அந்த ஆடியோவை கேட்டுவிட்டு சூடாகியிருக்கிறார். கையோடு தன் கட்சியின் மாவட்ட செயலாளர்களிடம், ‘இனி எந்த மாவட்டத்தின் விஷயம் வாட்ஸ் ஆப்பில் வந்தாலும் சரி, கவலையே படாமல் கட்சியிலிருந்து தூக்கி வீசிடுவேன். ஜாக்கிரதை.’ என்று எச்சரித்திருக்கிறாராம். 
வாட்ஸ் ஆப்பை கண்டுபிடித்தவனை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க. நிர்வாகிகள்.