Asianet News TamilAsianet News Tamil

3 எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுத்துப் பாருங்க !! சபாநாயகர் தனபாலுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை !!

நடுநிலை மறந்து, அரசமைப்பு கடமைகளை மீறி அதிமுகவை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பேரவை தலைவர் தனபால் மீது  நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டுவரும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

stalin  warning to dhanapal
Author
Chennai, First Published Apr 26, 2019, 9:54 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 23ஆம் தேதி 22 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் எதிர்நோக்கி இருக்கும் நிலையில்,  சட்ட அமைச்சர் சி.வி சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் இன்று பேரவைத் தலைவரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூவர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருப்பதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

stalin  warning to dhanapal

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டது. அந்த வழக்கை முடிந்த வரை காலதாமதம் செய்து, 18 மாதங்களுக்கு மேல் தேர்தலே நடத்தாமல் அ.தி.மு.க. ஆட்சி தொடர மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள ஆளுநரரும், சட்டவிரோதமாக அனுமதித்தனர். 

அதன் பலன் பா.ஜ.க.விற்கு அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணியாக மாறியது. ஆனால் தமிழக மக்கள் ஒரு மோசமான அரசின் நிர்வாக சீரழிவுகளை தினம் தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். 

பிறகு பல சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க - அ.தி.மு.க. ஆட்சி முற்றிலும் ஒரு மைனாரிட்டி ஆட்சியாகவே இந்த மக்களவைத் தேர்தலை சந்தித்தது.

இந்நிலையில் 17ஆவது மக்களவைத் தேர்தலுடன் முதலில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுற்று, பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்டதால் வருகின்ற மே 19-ஆம் தேதி மீதியுள்ள நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

stalin  warning to dhanapal

இந்த 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடையும் என்பதை தெரிந்து கொண்டதால் - சட்ட அமைச்சரும், அரசு கொறடாவும் தங்களது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து பேரவைத் தலைவரை சந்தித்து இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுக் கொடுத்திருக்கிறார்கள். 

22 தொகுதிகளிலும் தோல்வி அடையும் அதிமுக அரசுக்கு இருக்கின்ற மைனாரிட்டி அந்தஸ்தும் பறிபோய், ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பீதியில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று கொடுக்கப்பட்டுள்ள மனு மீது பேரவைத் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. 

ஒருவேளை நடுநிலைமை தவறி, அரசியல் சட்டத்தின் கடமைகளை மறந்து, பேரவைத் தலைவர் அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுத்தால், பேரவைத் தலைவர்மீது திமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.   

Follow Us:
Download App:
  • android
  • ios