Asianet News TamilAsianet News Tamil

20 ரூபாய் கோஷ்டியை பார்த்து நாங்க ஏன் பயப்படணும்? ஸ்டாலின் மரண கலாய்....

இடைத் தேர்தலில் போட்டியிட திமுக பயப்படுவதாக தினகரனின் விமர்சனத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
 

Stalin Troll Dinakaran Regards RK Nagar Token Issue
Author
Chennai, First Published Jan 6, 2019, 10:13 AM IST

திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை திமுக, அமமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக திமுகவைக் கடுமையாக விமர்சித்து வருகிறார் தினகரன். தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவாரூர் இடைத் தேர்தலைக் கண்டு ஆளுங்கட்சி பயப்படுவது போல எதிர்க்கட்சியான திமுகவும் பயப்படுகிறது” என கூறினார். 

அதுமட்டுமல்ல, “திமுக வேட்பாளரை அறிவித்துவிட்டு, தேர்தலுக்கு தடை கேட்டு தோழமை கட்சியினரை விட்டு வழக்கு தாக்கல் செய்து இரட்டை வேடம் போடுகிறது. ஆள்பவர்களும் ஆட்சி செய்தவர்களும் இடைத் தேர்தலில் காணாமல் போவார்கள்” என கூறினார்.

இதற்கு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது பதிலளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “நான் பயந்துகொண்டிருப்பதாக தினகரன் கூறுகிறார். பெங்களூரு சிறையில் சசிகலா இருப்பதற்காக அவர் பயப்படலாம். நேர்த்திக்கடன் போன்று வாரம்தோறும் பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்திப்பவர் தினகரன். அவர்மீது ஏற்கனவே பெரா வழக்கு, சிபிஐ விசாரணை, அமலாக்கத் துறை வழக்கு, சின்னத்துக்காக லஞ்சம் கொடுத்த வழக்கு ஆகியவை நிலுவையில் உள்ளன. அதற்காக அவர் பயந்துகொண்டிருக்கலாம். அதிமுகவுடன் ஒன்றாக இருந்த நேரத்தில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்தது, அதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களை வருமான வரித் துறையே வெளியிட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவரை ஆர்.கே.நகரில் எம்.எல்.ஏ தினகரன் என்று யாரும் அழைக்கவில்லை. 20 ரூபாய் தினகரன் என்றுதான் அழைக்கின்றனர். அவர், திமுக பயந்துகொண்டிருக்கிறது என்று சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது” என்று விமர்சித்தார்.

மேலும், “நாங்கள் தேர்தலைத் தள்ளிவைக்க முயற்சி செய்வதாக தினகரன் கூறுகிறார். அவ்வாறான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடவில்லை. தேர்தலைத் தள்ளிவையுங்கள் என்று யார் யாரோ சொல்லலாம். திருவாரூர் தலைவர் கலைஞர் பிறந்த மண்ணாக இருக்கும் நிலையில், அவர் இருமுறை வெற்றிபெற்றுள்ள நிலையில், அங்கு போட்டியிட நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஸ்டாலினை தினகரன் தொடர்ச்சியாக விமர்சனம் செய்துவருகிறார். ஆனால், தினகரனின் விமர்சனத்துக்கு ஒருமுறைகூட ரியாக்ஷன் செய்யமல் இருந்தார் ஸ்டாலின். தற்போது முதன்முறையாக தினகரனை விமர்சித்துள்ளதால், இதைப் பயன்படுத்தி அமமுகவினர், “திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி  என கூறி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios