"அமைச்சர் விஜயபாஸ்கர் நீட் தேர்வுக்காக டெல்லி செல்லவில்லை" - சொல்கிறார் ஸ்டாலின்!!
நீட் தேர்வுக்காக, அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி செல்லவில்லை என்றும், தனது தலைக்குமேல் தொங்கும் கத்திக்காக சென்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக கதிராமங்கலம் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான போராட்டத்தின்போது, கடந்த 30 ஆம் தேதி பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக கதிராமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் பேராட்டம் நடத்தி வருகின்றனர். கதிராமங்கலம் மக்கள் போராட்டத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கதிராமங்கலம் சென்று போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் கருத்து கேட்காமல் அதிமுக ஆட்சியில் ஓ.என்.ஜி.சிக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், போராட்டக்காரர்களை கைது செய்வதில் காட்டும் முனைப்பை மக்கள் நலன் காப்பதில் அரசு காட்டவில்லை அவர் குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் மு.க.ஸ்டாலின், திருச்சி மத்திய சிறையில் இருக்கும் பேராசிரியர் ஜெயராமனை சந்தித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேராசிரியர் ஜெயராமனை சந்தித்து நலம் விசாரித்ததாக கூறினார். மேலும் பேசிய அவர், நீட் தேர்வுக்காக, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெல்லி செல்லவில்லை என்றும், தனது தலைக்குமேல் தொங்கும் கத்திக்காக அவர் டெல்லி சென்றுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.