அதை சொல்லவே நாகூசுது... சு.சாமிக்கு அதிமுக மகளிர் அணி கொடுத்த வரவேற்பை நினைவூட்டி மோடிக்கு ஸ்டாலின் பதிலடி!
சென்னை உயர் நீதிமன்றத்தில் உங்கள் கட்சியில் இருக்கும் சுப்பிரமணியசாமிக்கு அதிமுக மகளிரணி கொடுத்த வரவேற்பு உங்களுக்குத் தெரியுமா என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்திருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர், திமுக-காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்துப் பேசினார். “திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயாரை இழிவாகப் பேசியிருக்கிறார்கள். திமுக- காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமே பெண்களை அவமானப்படுத்துவதுதான். கடந்த 1989 மார்ச் 25ம் தேதியை நீங்கள் மறந்துவிடாதீர்கள். அன்று சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை திமுக எப்படி நடத்தியது என்பதை மறந்துவிடக்கூடாது.” என்று காட்டமாக பிரதமர் மோடி விமர்சித்தார்.
நரேந்திர மோடியின் இந்தப் பேச்சுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலங்குளத்தில் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். “1989ஆம் ஆண்டு திமுகவினர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதாக மோடி கூறுவது அபாண்டமான பொய்யாகும். பட்ஜெட் தாக்கல் செய்யவந்த கருணாநிதியைத் தடுக்க அதிமுகவினர் நடத்திய நாடகம் அது. இதை திருநாவுக்கரசரே சட்டப்பேரவையில் பதிவு செய்திருக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உங்கள் கட்சியில் இருக்கும் சுப்பிரமணியசாமிக்கு அதிமுக மகளிரணி கொடுத்த வரவேற்பு உங்களுக்குத் தெரியுமா? அவற்றையெல்லாம் சொல்வதற்கே நாகூசுகிறது. பெண் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது உங்களுக்குத் தெரியுமா? அதிமுகவின் பெண்கள் பாதுகாப்பு பற்றி அவர்களிடமே இதையெல்லாம் கேட்டுப் பாருங்கள்.” என்று பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.