சட்டபேரவையின் நிகழ்வுகளை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தின் இறுதியில் பேசிய முக ஸ்டாலின், சசிகலா குடும்பத்தை மன்னார்குடி கும்பல் என்று கூறி அப்பகுதி மக்களை இழிவுபடுத்த விரும்பவில்லை, இனி மாஃபியா கும்பல் என்றே சொல்வேன் என தெரிவித்தார்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அதன்படி திருச்சியில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் இறுதியில் அவர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கப்படும். அதில் யார் யார் சிக்குவார்கள் என்று அப்போது பார்ப்போம்.

சசிகலா குடும்பத்தை மன்னார்குடி கும்பல் என கூறி அப்பகுதி மக்களை அசிங்க படுத்த வேண்டாம். இனி அவர்களை மாஃபியா கும்பல் என்றே சொல்வேன்.

அதிமுக ஆட்சியை செயல்படுத்தும் ரிமோட் பெங்களூர் சிறையில் உள்ள குற்றவாளியிடம் உள்ளது.

இந்த போராட்டம் என் சுயநலத்திற்காக நடத்தபடுகிற போராட்டம் அல்ல. தமிழகத்தில் நடைபெற்று வரும் பினாமி ஆட்சியை அப்புறபடுத்த வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளுக்காக நடத்தபடுகிற போராட்டம் இது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.