Asianet News TamilAsianet News Tamil

உயிரிழந்த திமுக பெண் நிர்வாகிக்கு ஸ்டாலினின் உருக்கமான வார்த்தைகள்...

திமுக முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.   சென்னை ராயப்பேட்டையில் உள்ள மறைந்த வசந்தி ஸ்டான்லி உடலுக்கு ஸ்டாலின் இன்று நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.  

Stalin, leaders pay homage to Vasanthi Stalin
Author
Chennai, First Published Apr 28, 2019, 12:05 PM IST

திமுக முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.   சென்னை ராயப்பேட்டையில் உள்ள மறைந்த வசந்தி ஸ்டான்லி உடலுக்கு ஸ்டாலின் இன்று நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் வசந்தி ஸ்டான்லி மறைவு குறித்து  ஸ்டாலின் தனது  இரங்கலை  தெரிவித்த ஸ்டாலின்; முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் சிறுபான்மை அணித் தலைவருமான வசந்தி ஸ்டான்லி திடீர் மறைவு என்ற துயரச் செய்தி என்னை பெரும் துயரத்திற்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை கழகத்தின் குரலாக மாநிலங்களவையில் பல்வேறு முக்கிய பிரச்னைகளில் ஒலித்தவர் வசந்தி ஸ்டான்லி. கழகம் நடத்திய போராட்டங்களில் தடந்தோள் தட்டி தவறாது முன்னின்றவர். தலைவர் கலைஞர் அவர்களால்  கழகத்தின் கருவூலம் என பாராட்டப்பட்டவர்.   

வருவாய் துறையிலும், வணிவரி துறையிலும் அரசு ஊழியராக இருந்த அவர் பொது வாழ்விற்கு வந்தவர். கழக மகளிர் அணி துணை செயலாளராகவும் பொறுப்பெடுத்து பணி செய்தவர்.

கழகத்தின் பேச்சாளராக மட்டுமல்ல தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாத நிகழ்ச்சியில் கழகத்தின் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தவர். கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணியிலும், மக்கள் பணியிலும் சிறப்பாகவும், செம்மையாகவும் பணியாற்றியவர். 
 
கலைஞர் 87 என்ற நூல் தொகுப்பினை அவர் வெளியிட்ட போது, அந்த நூலில், அப்பா!  என் ஆயுள் அடங்கும் கடைசி நொடியில் விழியோரம் ஒரு சொட்டு நீர் உருண்டு வரும். அது உங்கள் பாதத்தை நனைத்தால் நன்றிக் கடனை நான் அடைத்த பாக்கியத்தை அடைவேன் அப்பா! என்று உணர்ச்சி பொங்க - ஒரு கழகத் தொண்டருக்கே உரிய பாசத்தில் எழுதி - தலைவர் கலைஞர்  மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தவர்.

கழகத்தின் செயல் வீராங்கனையாகத் திகழ்ந்த அவர் இப்போது நம்மிடம் இல்லை. ஆனால் அவரின் உழைப்பு - உண்மைத் தொண்டு - கழகத்திற்காக அவரது கட்டுக்கோப்பான பணி எல்லாம் என்றைக்கும் கழகத்தில் உள்ள கடைக்கோடி தொண்டனுக்குக்கூட நினைவில் நிற்கும். திருமதி வசந்தி ஸ்டான்லியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கழக உடன்பிறப்புகள் - அனைவருக்கும் எனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்  என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios