எதுக்கு இப்படி பண்ணுறீங்கன்னு நேரடியா கேட்டுட்டன்ல ? ஸ்டாலின் விளக்கம்….
ஒரு மாநில ஆளுநருக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி எப்படி நீங்கள் ஆய்வு செய்யலாம் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தான் கேட்டுவிட்டதாகவும், அதற்கு தான் ஆய்வு செய்யவில்லை என்றும் அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ளவே சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தாக ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கு பயணாம் செய்து ஆய்வு நடத்தி வருகிறார். கவர்னரின் இந்த ஆய்வுக்கு திமுக தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதோடு, அவர் ஆய்வு செய்யும் இடங்களில் திமுகவினர் கருப்புக்கொடியையும் காண்பித்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை தமிழக கவர்னரின் அழைப்பின்பேரில் மு.க.ஸ்டாலின் அவரை ராஜ்பவனில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் ஒரு அரசு இயங்கி கொண்டிருக்கும்போது கவர்னராகிய நீங்கள் ஆய்வு செய்வது மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்று கூறியதாகவும், அதற்கு கவர்னர், தான் ஆய்வு செய்ய செல்லவில்லை என்றும் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து கவர்னர் என்ற முறையில் அறிந்து கொள்ளவே சென்றதாகவும் கூறியதாக மு.க.ஸ்டாலின் தனது பேட்டியுல் தெரிவித்தார்
ஆனாலும் கவர்னர் விளக்கத்தை நாங்கள் ஏற்காமல் மீண்டும் இதுகுறித்து விரிவாக விளக்கியதாகவும், இந்த விளக்கத்தை கேட்டுக்கொண்ட கவர்னர், இனிமேல் ஆய்வு செய்வது குறித்து பரிசீலிப்பதாக கூறியதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.