ஸ்டாலின் அவர்களே ஒப்பாரி வைக்காதீங்க.. இப்பவாவது நான் சொல்றத கேளுங்க.. செம்மையா ஐடியா கொடுத்த சிவி சண்முகம்.
ஆளுநர் தீர்மானத்தை திருப்பி அனுப்பி விட்டார் என ஒப்பாரி வைக்கிறார், கூவுகிறார், நாடகமாடுகிறார், நாடாளுமன்றத்தில் 39 எம்பிக்களை கையில் வைத்துக் கொண்டு எதையும் செய்ய முடியாமல் திணறுகிறார்.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இனியும் ஆளுநரின் நம்புவதை தவிர்த்து, உண்மையிலேயே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்றால் அதை சட்டப்பூர்வமாக அணுகி பெற வேண்டுமென முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி. வி சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் நீட் தேர்வு கொண்டுவரப்பட வேண்டுமென உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அதை சட்டரீதியாகத்தான் கையாள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் தற்கொலை கலந்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. பாஜகவை தவிர அதிமுக, திமுக, காங்கிரஸ் பாமக என அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வை விலக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்து வருகின்றன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டுமெனகூறி ஆளுநருக்கு அனுப்பியது, இந்நிலையில் 8 மாத கால தாமதத்திற்கு பிறகு மீண்டும் ஆளுநர் மாநில அரசுக்கே அதை திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இது அரசுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களால் அங்கீகரிக்கப்பட்ட சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் பரிசீலிக்க வேண்டுமே ஒழிய அதை காலம் தாழ்த்தி திருப்பி அனுப்புவது மரபுக்கு எதிரானது என்றும் ஆளுநருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை உடனே விளக்குவோம் என்றும், முதல் கையெழுத்தே நீட் கையெழுத்துதான் என்று ஸ்டாலின் உட்பட பலரும் கூறிவந்தனர். பின்னர் அதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் இன்று அதை திருப்பி அனுப்பியுள்ளார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது இயற்றப்பட்ட மசோதாவிற்கு திமுகவின் மசோதாவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவிலேயே உச்சபட்ச அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்றமே இந்தியா முழுவதும் இனி நீட் தேர்வு கொண்டுவரப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனடிப்படையில் நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்து வருகிறது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து அதனடிப்படையில் தீர்மானம் திமுக நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அன்ப்புகிறது. இந்த இடத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெரிதா.? ஓய்வுபெற்ற நீதிபதியின் கருத்து பெரியதா.? என்ற இந்தக் கேள்வியை நான் பலமுறை எழுதியிருக்கிறேன், ஆனால் திமுகவிடம் இருந்து இதுவரையிலும் அதற்கு பதில் இல்லை. ஏற்கனவே வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி நீட் தேர்வில் இருந்து விலக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதற்கு இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடக்கிறது, அதனால் உங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில்தான் ஆளுநர் தமிழக அரசின் தீர்மானத்தை திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆளுநர் முன்வைத்துள்ள கேள்விக்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது.
மீண்டுமொருமுறை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை, எனவே மீண்டும் மாணவர்களையும், மக்களையும் ஏமாற்றுவதை தவிர்த்து ஸ்டாலின் அரசு உறுதியான சட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும். இதேபோல்தான் 2018 ஆம் ஆண்டு ஆறு மாணவர்களும், அதற்கு அடுத்த ஆண்டு 8 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்தது. அதனால்தான் அதிமுக அரசு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக இயற்றியது. இதேபோல்தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு அனுப்பினோம். ஆனால் அவர் 3மாதம் காலம் தாழ்த்திவந்தார். எனவே இனியும் பொறுத்தால் நிலைமே மோசமாகிவிடும் என முடிவெடுத்து, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு தன் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்தை இயற்றிய அறிவிப்பு வெளியிட்டது. இதுவரை இந்தியாவில் எந்த முதலமைச்சரும் செய்யாத, துணிச்சலான முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுத்தார்.
ஆனால் தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் தீர்மானத்தை திருப்பி அனுப்பி விட்டார் என ஒப்பாரி வைக்கிறார், கூவுகிறார், நாடகமாடுகிறார், நாடாளுமன்றத்தில் 39 எம்பிக்களை கையில் வைத்துக் கொண்டு எதையும் செய்ய முடியாமல் திணறுகிறார். எனவே இனியும் ஸ்டாலின் அவர்கள் மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்பாமல், காலம் தாழ்த்தாமல் உண்மையிலேயே மாணவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என நினைத்தால், இந்த விவகாரத்தை சட்டபூர்வமாக அனுகி விலக்கு பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் ஆளுநர் தீர்மானத்தை திருப்பி அனுப்பியுள்ளது தொடர்பாக விவாதிக்க நாளை முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.