stalin condemns about local about election
உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டிப்பு செய்வதன் மூலம், தேர்தலை சந்திக்க இந்த அரசு அஞ்சுகிறது என்பதைக் காட்டுகிறது என திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் உள்ளாட்சி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதாவை அமைச்சர் வேலுமணி கொண்டு வந்தார். இதற்கு எதர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இது பற்றி செய்தியாளரிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
தேர்தலை, முறையாக நடத்திட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஏற்கனவே, உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், அதிகாரிகளின் பதவிகாலத்தை நீட்டித்து வந்ததை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றோம்.

உரிய கால அவகாசம் கேட்டு வந்த சூழ்நிலையில், கட்டாயம் குறிப்பிட்ட தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, இந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றுகின்றனர். இதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கின்றோம்.
இந்த அரசு தேர்தலை நடத்த அஞ்சுகிறது. சின்னம் இல்லை. கட்சி இரண்டாக மூன்றாக உடைந்து போயுள்ளது. ஆகவே, அரசு தேர்தலை நடத்த அஞ்சுகிறது என்றுதான் இந்த ஆட்சியின் நோக்கத்தை பற்றி எண்ண வேண்டியுள்ளது. இந்த அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அஞ்சி இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
