நீங்க இத மட்டும் செய்யுங்க ! உங்க தூக்கி வச்சு கொண்டாடுறோம்… எடப்பாடிக்கு ஸ்டாலின் சவால் !!
வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பியிருக்கும் முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால், பாராட்டு விழா நடத்த தயார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28 ஆம் தேதி இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக சென்றார். இந்த நாடுகளில் இருந்து 8 ஆயிரத்து 835 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக இன்று தாள்நாடு திரும்பிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனைக் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு, செயல்படும் தொழில் நிறுவனங்கள் எத்தனை?
அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன என்பதையெல்லாம் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அப்படி உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சார்பில் 'பாராட்டு விழா' நடத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது சவாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளத் தயாரா? என்று மு.க.ஸ்டாலின்.கேள்வியும் எழுப்பியுள்ளார் .