குனிய குனிய குட்டும் ஸ்டாலின் – அன்பு அண்ணனுக்காக மரம் நடும் கனிமொழி
திமுக தலைவர் கருணாநிதி முற்றிலுமாக உடல்நலம் குன்றி இருக்கும் நிலையில், அவரது மகள் கனிமொழி செயல் தலைவரும் அண்ணனுமான முக ஸ்டாலினால் புறக்கணிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அழகிரியுடன் போராடி போராடி ஓய்ந்து போன ஸ்டாலின் அழகிரியின் மதுரை கோட்டையை மெல்ல மெல்ல கரைத்து ஒருவழியாக கட்சியின் செயல் தலைவரும் ஆகிவிட்டார்.
ஸ்டாலின் செயல்தலைவர் ஆகும்போதே கனிமொழிக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி அளிக்கபட வேண்டும் என ராஜாத்தியம்மாள் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது.
ஆனால் அவை அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு யாருக்கும் பதவி கிடையாது என ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டார் ஸ்டாலின்.
ஸ்டாலின் செயல்தலைவராக அறிவிக்கப்பட்ட நிகழ்வின் போது, துரைமுருகன் பேசிய பேச்சால் உருகி போன ஸ்டாலின், அன்பில் மகேஷ், பொய்யா மொழி, மா.சுப்பிரமணியன், துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன், என ஒட்டுமொத்த அரங்கமே உணர்ச்சி பெருக்கால் கண்ணீரில் நனைந்தது.
இதுமட்டுமன்றி தொலைகாட்சி நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தங்கள் தளபதி செயல் தலைவர் ஆகிவிட்டார் என ஆனந்த கண்ணீர் விட்டனர்.
இவ்வளவு நடந்தும், நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்த கனிமொழி மட்டும், எந்த ரியாக்சனும் காட்டி கொள்ளாமல் கடும் அதிருப்தியில் இருந்தார்.
செயல் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு ஸ்டாலின் கனிமொழியை கண்டு கொள்ளவில்லை.
வருத்தத்தோடு இருந்த கனிமொழி வேறு வழியின்றி ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார். இதனை தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஜனநாயக படுகொலை நடைபெற்றதாக கூறி ஆளுனரை சந்தித்த முக ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலை முன்பாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
அறிவிக்கபடாத அந்த உண்ணாவிரதத்திற்கு சுமார் ஒரு லட்சம் பேர் வரை திரண்டதாக கூறப்படுகிறது. திமுக மகளிர் அணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி தங்களது செயல் தலைவரின் உண்ணாவிரதத்திற்கு அதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்டாலினுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார்.
சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்த கனிமொழியை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
இதனால் நொந்து போன கனிமொழி தொண்டர்களோடு தொண்டராக ஒரு மூலையில் சென்று தரையில் அமர்ந்தார்.
ஆனால் தனது மாமன் மகனான தயாநிதி மாறன் மட்டும் ஸ்டாலின் அருகில் சேர் போட்டு அமர்ந்து கொண்டார். இதனால் கனிமொழி கடுப்பாகி விட்டதாக கூறப்பட்டது.
பின்னர், நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஸ்டாலினின் டெல்லி பயணம் ஆகியவற்றில் தனக்கு முக்கியத்துவம் நிச்சயம் இருக்காது என்பதை உணர்ந்து கொண்ட கனிமொழி குடியரசு துணைத் தலைவருடன் ரூவாண்டா, உகாண்டா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணம் என்ற பெயரில் பறந்து விட்டார்.
எப்படியும் டெல்லியில் தான் இருந்திருந்தாலும் தனக்கு அவமரியாதை தான் கிடைத்திருக்கும் என கட்சி நிர்வாகிகளிடம் புலம்பி விட்டாராம் கனிமொழி. கருணாநிதி நல்ல நிலையில் இருந்தவரை நன்றாக ஓடி கொண்டிருந்த கனிமொழியின் கட்சி ஓட்டத்தில் மிகப்பெரிய தடை கற்கள் போடப்பட்டு வருவதாக பொறுருமுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
செயல் தலைவரான முக ஸ்டாலின் என்னதான் கனிமொழியை கண்டுகொள்ளாவிட்டாலும் ஸ்டாலினின் 64 வது பிறந்த தினத்தன்று தனது அண்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், மரக்கன்றுகளை நட்டாராம், கனிமொழி.
அழகிரியை ஓரம் கட்டுவதற்கு படாத பாடுபட்ட மு.க.ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்திற்கு கனிமொழி அச்சுறுத்தல் இல்லையென்றாலும் குடும்ப அரசியல் செய்கின்றனர் என்ற பெயரை தவிர்க்க இது போன்ற தளபதியின் சில கசப்புகளை எற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்கின்றனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள்.
ஆனால் மகளிரணி செயலாளரும் எம்பியுமான கனிமொழியை தவிர்த்துவிட்டு மாறனை மட்டும் அருகில் அமர்த்தி கொள்வது எந்த விதத்தில் நியாயம் ஆகும் என்கின்றனர் அதிருப்தியில் இருக்கும் கனிமொழி ஆதரவாளர்கள்.