கோபாலபுரத்தில் ஸ்டாலின் - அழகிரி!! அடுத்தகட்ட அதிரடி என்ன..? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
மெரினாவில் அதிரடி காட்டிய கையோடு கோபாலபுரத்திற்கு அழகிரி விரைந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, அதிரடியான பேட்டி கொடுத்த கையோடு, அழகிரி கோபாலபுரம் சென்றுள்ளார். கோபாலபுரத்தில் ஸ்டாலினும் உள்ளார். அழகிரியின் அடுத்தகட்ட அதிரடி என்ன என்பது தொடர்பான எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2014 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு முன்னதாக தென்மண்டல திமுக பொறுப்பாளராக அழகிரி இருந்துவந்தார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, கட்சி செயல்பாடுகளில் அழகிரி ஈடுபடவில்லை என்றாலும், அவருக்கு அதிருப்தி இருந்துவந்தது.
இந்நிலையில், கருணாநிதியின் மறைவிற்கு பிறகு மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பை பெறும் முனைப்பில் உள்ள அழகிரி, தனது மகனுக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு கேட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நாளை திமுக செயற்குழு கூட்டம் கூட உள்ளது. அந்த கூட்டத்தில் ஸ்டாலின், திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாளைய செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழுவுக்கான தேதியும் இறுதி செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், இன்று மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில், தனது மனைவி மற்றும் மகனுடன் வந்து அஞ்சலி செலுத்தினார் அழகிரி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தந்தையிடம் எனது ஆதங்கத்தை தெரிவித்தேன். கட்சி தொடர்பான ஆதங்கம் தான் அது. குடும்பம் தொடர்பானது அல்ல என்பதை தெளிவுபடுத்தினார்.
மேலும் திமுகவின் தொண்டர்களும் கருணாநிதியின் விசுவாசிகளும் தன் பக்கமே உள்ளதாகவும் திமுகவில் தற்போது இல்லாததால், செயற்குழு குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் அழகிரி தெரிவித்தார்.
கட்சி தொடர்பான விஷயங்களில் தான் ஆதங்கமாக இருப்பதை அழகிரி வெளிப்படையாகவே கூறியுள்ளதால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மெரினாவில் அதிரடியான பேட்டி கொடுத்த கையோடு, அழகிரி கோபாலபுரம் சென்றுள்ளார். கோபாலபுரத்தில் ஸ்டாலினும் உள்ளார். அழகிரியின் அடுத்தகட்ட அதிரடி என்ன என்பது தொடர்பான எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.