மத உணர்வை தூண்டுகிறாரா ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ? நேரில் ஆஜராக போலீசார் சம்மன் !!
அத்திவரதர் விவகாரத்தில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
காஞ்சியுரம் வரதாராஜப் பெருமாள் கோவில் அனந்தசரஸ் குளத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்குப் பின் வெளியே எடுக்கப்பட்டு கடந்த ஜுலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை பொது மக்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து அத்தி வரதர் மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அத்திவரதர் வைபவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோபர் ராமானுஜர் பேட்டி அளித்தார்.
இந்த பேட்டியின்போது அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அந்த காலத்தில் இஸ்லாமியர்களுக்கு பயந்து கொண்டு அத்தி வரதரை குளத்திற்குள் வைத்தார்கள்.
ஆனால் இப்போது அப்படி இல்லை எனவே அத்தி வரதரை வெளியிலேயே வைக்கலாம் என ஜீயர் தெரிவித்தாக கூறப்படுகிறது.
ஜீயரின் இந்தப் பேச்சு மத உணர்வை புண்படுத்துதாக கூறி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சையது அலி என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் மனுவை பதிவு செய்த போலீசார், வரும் 22-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ஜீயருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.