Spirituality should not be in politics TTV Dinakaran told
ஆன்மீகம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றும் அரசியலில் ஆன்மீகத்தை பயன்படுத்துவது தவறாக முடியும் என்றும் ரஜினியின் முடிவுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக அரசியலுக்கு வருவதாக போக்குகாட்டி வந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த 31 ஆம் தேதியன்று தான் அரசியல் களத்தில் குதிக்கப் போவதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலின் போது புதிய கட்சி ஒன்று தொடங்கி 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக தெரிவித்தார். தான் தொடங்கும் கட்சியில் ஆன்மீகம் இருக்கும் என்றும் ரஜினி தெரிவித்தார்.

ரஜினியில் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீகம் சலந்த அரசியல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்றும், பாஜக போல ஒரு மதவாத கட்சியாக அது உருவெடுக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து சென்னை பெசன்ட் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், இந்தியா மொழி, மதம், கலாச்சாரம், பழக்கவழக்கம் என பல்வேறு வகைகளில் பிரிந்திருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாத்பரியத்தில்தான் இயங்கி வருவதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஆன்மீகம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றும் அரசியலில் ஆன்மீகத்தை பயன்படுத்துவது தவறாக போய் முடியும் என்றும் தினகரன் தெரிவித்தார்.
மதம் என்பது வாழ்க்கைமுறை, பல மதங்கள் இருந்தாலும் தனிப்பட்ட மனிதனின் விருப்பத்திற்கேற்ப கொள்கைகள் மாறுபடும்,, எனவே ஆன்மீகத்தை அரசியலில் கொண்டுவரக்கூடாது என்று தெரிவித்தார்.
