விசாரணையில் கிஷோர் என்பவர் மடிப்பாக்கம் செல்வத்தை கொலை செய்ய தங்களை வரவழைத்ததாகவும் கொலைக்கான காரணம் தங்களுக்கு தெரியாது எனவும் அருண் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தி.மு.க பிரமுகரான மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த கூலிப்படை தலைவன் முருகேசனை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தி.மு.க பிரமுகரான செல்வம் கடந்த பிப். 1 ஆம் தேதி தனது வீட்டருகே நின்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உள்ளாட்சித் தேர்தல் தேதி நெருங்கி வந்த நிலையில் தி.மு.க பிரமுகர் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அவரது மனைவிக்கு மடிப்பாக்கம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் சீட் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பிப் 3 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கூலிப்பரையைச் சேர்ந்த விக்னேஷ், புவனேஷ்வர், சஞ்சய், கிஷோர் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த மற்றொரு நபரான அருண் என்பவர் பிப். 15 ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கூலிப்படையைச் சேர்ந்த முக்கிய நபரான அருணின் உறவினரான முருகேசன் தான் கூலிப்படையின் தலைவன் என்பதால் போலீசார் சரணடைந்த அருணை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிஷோர் என்பவர் மடிப்பாக்கம் செல்வத்தை கொலை செய்ய தங்களை வரவழைத்ததாகவும் கொலைக்கான காரணம் தங்களுக்கு தெரியாது எனவும் அருண் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கூலிப்படை தலைவனான முருகேசனை அருண் அளித்த தகவலின் அடிப்படையில் நேற்றிரவு தனிப்படை போலீசார் வியாசர்பாடியில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட முருகேசன் ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்ற அடிப்படையிலும், அவர்தான் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கூலிப்படையின் தலைவன் என்பதால், கொலைக்கான காரணத்தை கண்டறிய முருகேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.