இயற்கை விவசாயத்திற்கு ரூ.400 கோடி.! சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த திட்டம்.! வேளாண் பட்ஜெட் சிறப்பம்சம்
தமிழ்நாட்டில் யூரியா,பொட்டாஸ் உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பயிர் பரப்பளவு அதிகரிப்பு
தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. கடந்த வேளாண் பட்ஜெட்டில் 86 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 80 அறிவிப்புகளுக்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் குறுவை சாகுபடி 4 லட்சத்து 96 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்றுள்ளதாகவும், நெல் சாகுபடி மொத்த அளவு 53.56 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளதாகவும் குறினார். தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்தால் 29 மாவட்டங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், காலநிலை மாற்றத்தை தாங்கி வளரும் பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூறினார்.
இயற்கை விவசாயத்திற்கு ரூ.400 கோடி
இளைஞர் வேளாண் தொழில் தொடங்க தேவையான நிதி உதவி அளிக்கப்படும் என தெரிவித்தவர், முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி அளித்து வேளாண் தொழில் தொடங்க உதவி செய்யப்படும் என கூறினார்.கிராமங்களில் இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என தெரிவி்த்தார்.. 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சரின் நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் மானாவாரி நில தொகுப்பு செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வுகான தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். சிறு தானியங்கள் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என குறிப்பிட்டார். மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 400கோடி ரூபாய் வழங்கப்படும் என கூறிய அமைச்சர் இயற்கை உரங்கள் தயாரிக்க 100 குழுக்கள் உருவாக்கப்படும் என கூறினார்.
துவரை சாகுபடி சிறப்பு மண்டலம்
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் ஏற்படுத்தப்படும் என்றும் தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறினார். சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த சூரியகாந்தி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்படும் என்றும் இதற்காக 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். வேளாண் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் தொழில் தொடங்க தலா ஒரு லட்சம் வீதம் நிதி வழங்கப்படும் என கூறினார். தமிழ்நாடு விவசாயிகள் பயன் அளிக்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்திற்கு 2,339 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்