முதல்முறையாக தசரா விடுமுறைக்கு சிறப்பு பேருந்து இயக்கும் தமிழக அரசு …..தயார் நிலையில் 6 ஆயிரம் பேருந்துகள் !
சரஸ்வதி பூஜை, விஜயதசமி விடுமுறைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக முதல்முறையாக 6 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்க உள்ளது . இதற்கு முன் பொங்கல் விடுமுறை, தீபாவளிக்கு மட்டுமே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இப்போது முதல்முறையாக விஜயதசமி விடுமுறைக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன
விஜயதசமி, சரஸ்வதி பூஜை பண்டிகைக்கான விடுமுறை 5-ம் தேதி தொடங்கி 8-ம் தேதிவரை இருக்கிறது. இந்த 4 நாட்கள்விடுமுறையில் சென்னையில் உள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் பேருந்து நிலையத்தில் கூடும்போது கடும் கூட்ட நெரிசல் உருவாகும். இதை கடந்த காலங்களில் ஏராளமானவற்றை மக்கள் அனுபவித்து இருக்கிறார்கள்.
இதை இந்த ஆண்டு தவிர்க்கும் வகையில், சிறப்பு பேருந்துகளை இயக்கி, மக்களை சிரமமின்றி பயணிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதிவரை நாள்தோறும் 1,695 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளன. இதுதவிர நாள்தோறும் 2,225 வழக்கமான பேருந்துகளும் இயக்கப்படுகின்றன
இதுதவிர கோவை, திருப்பூர், பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்காக தனியாக 1,242 பேருந்துகள் தனியாக இயக்கப்பட உள்ளன.
பயணிகள் டிக்கெட் முன்பதிவுக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமலில், மாதவரம் உள்ளிட்ட 30 இடங்களில் வரும் 3-ம் தேதி முதல் சிறப்பு டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்கப்படும். மேலும் பயணிகள் ஆன்லைன் மூலம், www.tnstsc.in,www.redbus.in,www.paytm.cm,www.busindia.comஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்யலாம்.
மேலும், பண்டிகைக் காலம் முடிந்து வரும் 8, 9-ம் தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் பயணிகளுக்கு மாதவரத்தில் தனியாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது
பொங்கல், தீபாவளி பண்டிகை நேரத்தில் போக்குவரத்தில் என்னமாதிரியான மாறங்கள் செய்யப்படுமோ அது தசரா விடுமுறைக்கும் பின்பற்றப்படும். மாதவரம், தாம்பரம், கோயம்பேடு, அண்ணாநகர் ஆகிய இடங்களில் தனித்தனி பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் புறப்படும்