Chennai Rain: நேரடியாக நானும் களத்தில் இறங்கிவிட்டேன்.. கவலைப்படாதீங்க.. பம்பரமாக சூழலும் முதல்வர் ஸ்டாலின்..!
நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று பிற்பகல் 12 மணியில் இருந்து மிதமான மழையாக பெய்ய தொடங்கியது. இதனையடுத்து, நேரம் செல்ல செல்ல கனமழை வரை கொட்டித் தீர்த்தது. சுமார் 10 மணிநேரத்திற்கு மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையால் சென்னை நகர் முழுவதும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. முக்கிய சாலைகளான அண்ணாசாலை, பூந்தமல்லி பெரியார் நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை, 100 சாலை என நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழைநீர் தேங்கிய சில இடங்களில் வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. இதே நிலைதான் சென்னை புறநகர் பகுதியில் காணப்பட்டது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து, சென்னை திரும்பியவுடன், சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது தமிழக முதல்வர் கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மழைநீர் தேக்கம் குறித்த புகார்கள் குறித்தும், அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், கட்டுப்பாட்டு அறையில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பணிகளில் ஈடுபட்டுள்ள பிற சேவை துறைகளான காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மின் துறை சார்ந்த அலுவலர்களுடன் துறை சார்ந்த புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், தேவையான அளவிற்கு நீர் இறைக்கும் பம்புகள் கொண்டு உடனடியாக தேங்கிய மழைநீரை வெளியேற்றவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வு செய்து கண்காணித்து வருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வு செய்து கண்காணித்து வருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும் என தெரிவித்துள்ளார்.