ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா, ஆலுமா டோலுமா போன்ற பாடல்களை சுட்டிக்காட்டி, இது போன்ற சூழலில் நமது தொன்மையான கலாச்சார, பண்பாட்டை பேணிக்காக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ., நயினார் நகேந்திரன் கேட்டுக்கொண்டார். 

ஜாக்கெட் தைக்க ரூ.1700

சட்டப்பேரவையில் தொழிற்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், பள்ளியை முடிக்கும் போது மாணவர்களிடம் என்ன திறன் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் வகையில் அவர்களை வழி நடத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார். தன் மனைவிக்கு ஒரு சேலை, ஜாக்கெட் தைப்பதற்கு ரூ.1,700-ஐ கட்டணமாக வாங்கிவிட்டார்கள் என்றும், தையல் & எம்ப்ராய்டரி கலையையெல்லாம் ஏன் ஒரு படிப்பாக கொண்டு வந்து, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பினார்

பாடலை புரிந்து கொள்ள இந்தி தேவையா?

பெண்களின் உடலில் உடை எங்கே இருக்கிறது என்று தேட வேண்டியது வருத்தமாக இருப்பதாக பேசிய நயினார் நகேந்திரன், தற்போது பிரபலமாக உள்ள ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா என்பதெல்லாம் என்ன மாதிரியான பாடல் என்று கேள்வி எழுப்பி, இது போன்ற பாடல் வரிகளால் 50 வருடங்களுக்கு பின்னால் வருவோர், இதுதான் நம் முன்னோர்களின் கலாச்சாரமாக இருந்ததாக எண்ணிவிடமாட்டார்களா என்றும், இப்போது வரும் ஆலுமா டோலுமா போன்ற பாடல் வரிகளை புரிந்து கொள்வதற்கு இந்தி படித்துவிட்டா?அர்த்தம் தேட முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

பொள்ளாட்சி ஜெயராமன் கேள்வி

அப்போது குறுக்கிட்டு பேசிய அதிமுக எம்.எல்.ஏ., பொள்ளாட்சி ஜெயராமன், சேலை, ஜாக்கெட் தைப்பதற்கு இவ்வளவு ஆகின்றது என்பது நயினாருக்கு எப்படி தெரிந்தது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய நயினார் நாகேந்திரன், தனது மனைவி தைக்க கொடுத்த துணியை வாங்க செல்லும் போது இதையெல்லாம் தெரிந்து கொண்டதாக தெரிவித்தார். எனவே இதுபோன்ற சூழலில், நமது தொன்மையான பண்பாட்டை நாம் போற்றிப் பேணிக்காக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏ., நயினார் நகேந்திரேன் வலியுறுத்தினார்.