தேர்தலுக்காக எனது மகன் கதிர் ஆனந்தை லாரி ஏற்றி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார்கள் என்றும் அந்த துரோகி யார் என்று தனக்கும் தெரியும் என்றும் திமுக பொருளாளர் துரை முருகன் மேடையில் கண்ணீர் விட்டு அழுது பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா ஆம்பூரில் நடைபெற்றது. திமுக பொருளாளாரும், எம்எல்ஏவுமான துரை முருகன் கலந்து கொண்டு கதிர் ஆனந்த்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது வேலூர் மாவட்டத்தில் ஆண்டியப்பனூர் மற்றும் மோர்தானா அணைகள், நீதிமன்றங்கள், சட்டக் கல்லூரி, மருத்துக் கல்லூரி, திருவள்ளூர் பல்கலைக்கழகம் என ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்தவன் நான்.

ஆனால் வேலூரிலேயே இல்லாத ஒருவர் வேலூர் மாவட்டத்துக்கு துரை முருகன் என்ன செய்தார் ? என கேட்கிறார்.

எங்கள் வீட்டில் பணத்தைக் கொண்டுவந்து வைத்துவிட்டு வருமானவரித்துறையினரை அனுப்பியது யார்? எங்கள் விட்டு வேலைக்காரருக்கு செல்போன் வாங்கித் தந்தது யார் ? என்னுடைய மகனை லாரி ஏற்றி கொல்ல சதித் திட்டம் தீட்டியது யார் ? அந்த துரோகி யார் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் அவரது பெயரை நான் சொல்ல மாட்டேன் என பேசும்போது துரை முருகன் கண்ணீர்விட்டு அழுதார்.

வேலூருக்கு ஏராளமான நன்மைகளை செய்தவன் நான். அது போல என் மகனும் வேலூர் தொகுதிக்கு பல நன்னைகளை செய்வார், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார் என துரை முருகன் பேசினார்.