பொறுப்பான அமைச்சர் வாயில் இருந்து இப்படியொரு வார்த்தை வரலாமா? நிதியமைச்சரை அலறவிடும் செல்லூர் ராஜூ..!
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை . மூன்று முன்னாள் அமைச்சர்கள், எந்த திட்டத்தில் தங்களுக்கு அதிக வருமானம் வரும் என்று பார்த்து இந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர்.
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி உள்பட எந்த வளர்ச்சி திட்டத்திலும் தவறு நடக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
நேற்று மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியை ஆய்வு செய்த நிதித்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை . மூன்று முன்னாள் அமைச்சர்கள், எந்த திட்டத்தில் தங்களுக்கு அதிக வருமானம் வரும் என்று பார்த்து இந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். மூன்று அமைச்சர்களின் ஊழலும் வருமானம் மட்டுமே முக்கியமாகப் பார்க்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டிருந்தார்.
இதுதொடர்பாக செல்லூர் ராஜூ விடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் ஒரு பொறுப்பான அமைச்சர் வாயிலிருந்து இந்த வார்த்தை வருவது வரவேற்கத்தக்கது அல்ல. இன்றைக்கு ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவர்கள் கையில் இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எவ்வளவு பயனளிக்கிறது என்பது நகர மக்களுக்கு தெரியும். அவரது தொகுதியான மதுரைக்கு அவர் வருகிறாரா, போகிறாரா, தொகுதி மக்களை பார்க்கிறாரா என்று தெரியவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் 75% நிதி அமைச்சரின் தொகுதியில் தான் நடைபெறுகிறது.
அதுவே அவருக்கு தெரியவில்லை. இப்படிப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்த மக்கள்தான் வருத்தப்படணும். சட்டம் உங்கள் கையில் இருக்கிறது. யார் தவறு செய்திருக்கிறார்களோ, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள். அதை விட்டு விட்டு பொத்தம் பொதுவாக குறை கூறுவது தவறு. இப்படி பேசுவதை நிதியமைச்சர் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.