அமெரிக்காவில் இருந்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சென்னை திரும்பிய நிலையில் அவரது தடுமாற்றமான நடை தொண்டர்களை பதற வைத்துள்ளது. எப்போதும் விஜயகாந்த் தொடர்புடைய மருத்துவ சிகிச்சை விவரங்களை தே.மு.தி.க ரகசியமாகவே வைத்திருக்கும்.

அமெரிக்காவில் இருந்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சென்னை திரும்பிய நிலையில் அவரது தடுமாற்றமான நடை தொண்டர்களை பதற வைத்துள்ளது. எப்போதும் விஜயகாந்த் தொடர்புடைய மருத்துவ சிகிச்சை விவரங்களை தே.மு.தி.க ரகசியமாகவே வைத்திருக்கும். ஆனால் கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா சென்று விஜயகாந்த் சிகிச்சை பெற உள்ளதாக அந்த கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் தமிழகம் முழுவதும் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நல்ல முறையில் திரும்ப வேண்டும் என்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதற்கு இடையே அமெரிக்காவில் மனைவி மற்றும் மகனுடன் பிக்னிக் செல்வது போன்ற புகைப்படங்களை விஜயகாந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ யூட்யூபில் பல சாதனைகள் படைத்தது. இந்த நிலையில் திடீரென திருப்பூரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தே.மு.தி.க மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. 

இது குறித்து விசாரித்த போது விஜயகாந்திற்கு அமெரிக்காவில் சிகிச்சை தொடர்வதாகவும் அவர் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்படும் என்பதால் மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அவரது கட்சிக்காரர்கள் கூறினர். ஆனால் திடீரென விஜயகாந்த் நள்ளிரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து நேராக மெரினா வந்த அவர், கலைஞர் நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அமெரிக்கா செல்லும் போது விஜயகாந்த் நடையில் தடுமாற்றம் இருந்தது. அவர் மனைவி பிரேமலதா கைதாங்கலாக அழைத்துச் சென்றார். ஆனால் அமெரிக்காவில் இருந்து விஜயகாந்த் திரும்பிய பிறகு அவரது நடையில் மேலும் தடுமாற்றம் அதிகரித்துள்ளது. 

இந்த முறை மனைவி பிரேமலதா மைத்துனர் சுதீஷ் கைத்தாங்கலாக விஜயகாந்தை கலைஞர் நினைவிடத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது விஜயகாந்தின் நடையில் உள்ள தடுமாற்றத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் விஜயகாந்த் தடுமாறி நடக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் பலரும் விஜயகாந்தின் நடை மேலும் தடுமாற ஆரம்பித்துள்ளது குறித்து வேதனையுடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.