சிவன் கோயில்- பெருமாள் கோயில்களை இடித்து தரைமட்டமாக்க வேண்டும்... அதிரவைக்கும் திருமா..!
சிவன் கோயில்கள், பெருமாள் கோயில்களை இடித்து விட்டு அந்த இடங்களில் பெளத்த விஹார்களை கட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசி இருப்பது மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
இதுகுறித்து அவர் பேசியுள்ள வீடியோவில், ‘’அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை. சான்றாவணங்களை நாம் கேட்பதே பொறுத்தமற்றது. ஏனென்றால் ராமன் பிறந்திருந்தால் தானே காட்டமுடியும். ராமன் ஒரு கற்பனை பாத்திரம். பிறந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படியே இருந்தாலும் 2000 ஆண்டுகள் இருப்பது தான் வரலாறு. அவர்கள் ஏதோ 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாகச் சொல்கிறார்கள்.
அப்படிப்பார்த்தால் இன்றைக்கு சிவன் கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கும் இடத்தில் பெளத்த விஹார்கள் இருந்தன. பெளத்த விஹார்களை இடித்து தரைமட்டமாக்கி விட்டுத்தான் சிவன்கோயில்களை கட்டி இருக்கிறீர்கள்... பெருமாள் கோயில்களை கட்டி இருக்கிறீர்கள். எனவே அந்த கோயில்களை இடித்து தரைமட்டமாக்கி விட்டு அந்த இடங்களில் எல்லாம் பெளத்த விஹார்களை கட்டவேண்டும்.
உங்கள் வாதத்திற்காக சொல்லுகிறேன். ராமர் கோயில் இருந்த இடத்தில் பாபர் மசூதி இருந்ததென்றால் 450 ஆண்டுகால வரலாற்றுச் சின்னத்தை இடித்து விட்டு ராமர் கோயில் கட்டுவோம் என்பது சரியான வாதம் என்றால் திருப்பதி ஏழுமலையான் இருக்கிற இடத்திலே பெளத்த விஹாரை கட்ட வேண்டும். திருவரங்கநாதன் படுத்திருக்கிற இடத்திலே புத்த விஹாரைக் கட்ட வேண்டும்.
காஞ்சி காமாட்சி இருக்கிற இடத்திலே புத்த விஹாரை கட்ட வேண்டும். இந்தியாவில் இருக்கிற சிவன், பெருமாள் கோயில்கள் ஒரு காலத்தில் பெளத்த, சமணக் கோயில்களாக இருந்தன. யாரும் மறுக்க முடியுமா?’’ என அவர் பேசியிருக்கும் வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.