பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையிலேயே சசிகலா தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையிலேயே சசிகலா தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் இருந்த சசிகலா இன்று (ஜன. 27) விடுதலையானார். இதனைத் தொடர்ந்து சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனைக்கு சென்ற சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் கையெழுத்து பெற்று விடுதலையை அறிவித்தனர். மேலும் இதுதொடர்பான எழுத்துபூர்வ அறிக்கையும் அளிக்கப்பட்டது. முன்னதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, அதே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில் மருத்துவமனை தரப்பில் இருந்து அது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: சசிகலா இன்று(ஜன. 27) காலை 11 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். கடந்த 20-ம் தேதி பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 21 ஆம் தேதி விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா வழிமுறைகளின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலா உடல் நிலை சீராக உள்ளது. 96/97 என்ற அளவில் ஆக்சிஜன் அளவு உள்ளது. கடந்த 12 மணி நேரம் செயற்கை சுவாசக் கருவியின் உதவி இல்லாமல் இருக்கிறார். 

மேலும், சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் அதேபோன்று செயற்கை சுவாசக் கருவியின் உதவியின்றி 3 நாள்கள் இருந்தால் அனுமதிக்கப்பட்ட 10 ஆவது நாளில் விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்கள் அவர் அங்கு சிகிச்சையில் இருப்பார் என தெரியவந்துள்ளது.