திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும், கேரள சட்டப்பேரவை உறுப்பினர் சச்சின் தேவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

2016ல் தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியானது ‘கொடி’. அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் தமிழகத்தில் நன்றாக ஓடியது. மேலும் கன்னடம் மாற்றம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த த்ரிஷாவும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த தனுஷும் 'வளரும் அரசியல்வாதிகள்'. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் நிஜத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகக் காதலிக்கும் இருவரும், அந்தக் காதலுக்கு குறுக்கே அரசியலே கிடையாது என அவ்வப்போது சொல்லிக் கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் அது என்ன ஆகிறது ? என்பதே கதை. கொடி படத்தில் வருவதை போலவே கேரளாவில் அரசியல்வாதிகள் இருவர் "ரியல்" ஜோடியாக ஒன்று சேர இருக்கின்றனர்.

திருவனந்தபுரத்தின் மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். கல்லூரி மாணவியாக இருந்த இவரை மேயராக்கி அழகு பார்த்தது மார்க்சிஸ்ட் கட்சி. இவர்தான் இந்தியாவின் இளம் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மேயராக பொறுப்பேற்ற போது, இவர்தான் அன்றைய ட்ரெண்டிங். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கேரளம், அதிக அளவில் இளவயதினருக்குப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தது. 

அதன்மூலம் அதிகாரத்துக்கு வந்ததில் முக்கியமானவர் ஆர்யா ராஜேந்திரன். இவருக்கும், பாலுச்சேரி எம்.எல்.ஏ சச்சின் தேவுக்கும் திருமணம் நடக்க உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சச்சின் தேவ், கேரள சட்டப்பேரவையில் மிக இளவயது உறுப்பினர் ஆவார். இப்போது 28 வயதாகும் சச்சின் தேவ், இந்திய மாணவர் சங்கத்தில் மாநில செயலாளராக உள்ளார். 

எஸ்.எப்.ஐ (SFI) அமைப்பின் தேசிய இணைச் செயலாளராகவும் உள்ளார் சச்சின் தேவ். ஆர்யா ராஜேந்திரனும், சச்சின் தேவும் சிறுபிராயத்தில் இருந்தே இந்திய மாணவர் சங்கத்தில் வளர்ந்தவர்கள். அதனால் இருவருக்கு இடையிலும் நல்ல நட்பு இருக்கிறது. கொள்கைப்பிடிப்புள்ள இவர்கள், சேர்ந்து தம்பதிகளாக வாழ்வது பொருத்தமாக இருக்கும் என இந்த முடிவை எடுத்திருப்பதாக, கோழிக்கோட்டில் வசிக்கும் எம்எல்ஏ சச்சின் தேவின் தந்தை நந்தகுமார் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.