செய்யாதுரை அலுவலகம், வங்கி லாக்கர்களுக்கு சீல்…. மகன் நாகராஜை சென்னைக்கு அள்ளிச் சென்ற ஐடி அதிகாரிககள் !!
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் அலுவலகம் மற்றும் வங்கி லாக்கர்களுக்கு சீல் வைத்த வருமானவரித்துறை அதிகாரிகள், அவரது மகன் நாகராஜை விசாரணைக்காக சென்னைக்கு அள்ளிச் சென்றனர்.
அரசு ஒப்பந்தத்தில் முறைகேடுகள் செய்து பல கோடி ரூபாய் சுருட்டியதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த பாலையம்பட்டியில் வசிக்கும் பிரபல காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையிட்டனர்.
15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தியதோடு அதில் கிடைத்த புதிய ஆதாரம், ஆவணங்கள் பற்றி செய்யாத்துரை மற்றும் அவரது ஆடிட்டரிடம் மாலை வரை கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். மேலும் செய்யாத்துரை மகன் கருப்பசாமியை அழைத்து சென்று வங்கி லாக்கரில் உள்ள ஆவணங்கள், தங்க நகைகளை ஆய்வு செய்து வங்கி லாக்கரை சீல் வைத்தனர்.
அதிகாரிகளின் விசாரணையின் போது செய்யாத்துரையிடம் இருந்து தமக்கு பதில் தெரியாது என்றும் மற்ற விவரங்கள் சென்னையில் வசிக்கும் மற்றொரு மகன் நாகராஜுக்கு மட்டும் தான் தெரியும் என கூறி முடித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாகராஜை நேற்று மாலை சென்னையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வருமான வரித்துறை சென்னை மண்டல இணை இயக்குனர் ஜெயராகவன் மற்றும் 5 அதிகாரிகள் அழைத்து வந்தனர். அங்கு ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் விடிய,விடிய தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து செய்யாதுரையின் அலுவலகங்களுக்கும் வருமான வரித்துறையினர் சீல் வைத்தனர். மேலும் செய்யாதுரையின் மகன் நாகராஜை மீண்டம் சென்னைக்க அள்ளிச் சென்றனர். கிட்டத்தட்ட எஸ்பிகே நிறுவனம் தொடர்பாக அனைத்து விவரங்களும் தனது மகன் நாகராஜனுக்கு மட்டுமே தெரியும் என்று செய்யாதுரை வாக்குமூலம் அளித்துள்ளதால் அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் குடைந்தெடுப்பார்கள் என தெரிய வருகிறது.