பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை.. கெபிராஜை 2 நாள் காவலில் எடுத்தது சிபிசிஐடி போலீஸ்.
பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தற்காப்பு கலை பயிற்சியாளர் கெபிராஜை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணைக்காக 2 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர்.
பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தற்காப்பு கலை பயிற்சியாளர் கெபிராஜை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணைக்காக 2 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர். சென்னை அண்ணா நகர் பகுதியில் தற்காப்புக்கலை பயிற்சி நடத்தி வந்த கெபிராஜ் 19 வயது பயிற்சி மாணவி ஒருவரை நாமக்கல் மாவட்டத்திற்கு போட்டிக்காக அழைத்து சென்றுவிட்டு வரும் வழியில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல் துறையினர் கெபிராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கடந்த 30ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கெபிராஜிக்கு வருகிற 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சிறையில் அடைத்தனர். கெபிராஜ் மீது புகார் அளித்த மாணவி வேறு மாநிலம் என்பதாலும், குற்றம் நடந்தது நாமக்கல் மாவட்டம் என்பதனை கருத்தில் கொண்டு சிபிசிஐடி-க்கு வழக்கை மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி கடந்த 4 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி தொடங்கி விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் லதா-வை நியமித்துள்ளனர்.
அதன் ஒரு கட்டமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தற்காப்புக் கலை பயிற்சியாளர் கெபிராஜை சிபிசிஐடி காவல் துறையினர் இன்று காவலில் எடுத்துள்ளனர். 2 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் ஜெபிராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புகார் அளித்த பெண்ணிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெபிராஜ் இதே போல் வேறு பயிற்சி மாணவிகளிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.