Senthil Balaji supporters are appearing in the income tax department
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 3 பேர், திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கடந்த 21 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 4 நாட்களாக நடைபெற்றது.
சோதனையின்போது, ரூ.60 கோடி வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் ரூ.1.3 கோடி ரொக்கம் மற்றும் ரூ.3 கோடி மதிப்புள்ள வெள்ளி, தங்கம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
சோதனையில் 10 பினாமி வங்கி கணக்குகளை கண்டுபிடித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.
தியாகராஜன், சுப்பிரமணி மற்றும் சுவாமிநாதன் உள்ளிட்ட 11 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனை அடுத்து தியாகராஜன், சுப்பிரமணி, சுவாமிநாதன் ஆகீயோர் வருமான அலுவலகத்தில் சென்று ஆஜராகி அதிகாரிகளிடம் விளக்கமளித்து வருகின்றனர்.
