ஜம்முன்னு இருக்கணும்னா கம்முன்னு இருந்துட்டு போய்டுவோம்... செந்தில் பாலாஜி பயத்தில் எஸ்.பி.வேலுமணி..!
மூவரின் கட்டுப்பாட்டுக்குள் தான் இன்னமும் ‘கொங்கு மண்டலம்’ இருக்கிறது. அதனை உடைக்க வேண்டும் என்பதே முதல்வர் ஸ்டாலினின் முக்கிய திட்டம்.
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்த திமுகவினால், கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியவில்லை. ஏனென்றால் அதிமுகவின் முக்கிய மூன்று முகங்களான எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமனி என்ற மூவரின் திறமையே காரணம். இந்த மூவரின் கட்டுப்பாட்டுக்குள் தான் இன்னமும் ‘கொங்கு மண்டலம்’ இருக்கிறது. அதனை உடைக்க வேண்டும் என்பதே முதல்வர் ஸ்டாலினின் முக்கிய திட்டம்.
அதற்கு ஏற்றவாறு, அமைச்சர் செந்தில்பாலாஜியை கோவை மாவட்டத்திற்கும், அமைச்சர் கே.என்.நேருவை சேலம் மாவட்டத்திற்கும் பொறுப்பாளராக நியமித்து இருக்கிறார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக கோவைக்கு போய் வந்தார். முதல்வரை வரவேற்க ஒரு ஓட்டுச்சாவடிக்கு 40 பேர் வீதம், 2,500 ஓட்டுச்சாவடிக்கு ஒரு லட்சம் பேரை திரட்ட வேண்டும் என ஆளுங்கட்சியினர் திட்டம் போட்டு இருந்தார்கள். ஆனால், எதிர்பார்த்த கூட்டம் வராததால், ஆளுங்கட்சியின் கோவை பொறுப்பாளர்கள் 'அப்செட்' ஆகி விட்டார்கள். இதனால், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னால், சில நிர்வாகிகளை களையெடுக்கப்படலாம் என பேசிக் கொள்கிறார்கள். அதே நேரம் கோவையில் தி.மு.க., வேரூன்ற கூடாது என்று அ.தி.மு.க., தரப்பும் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள்.
ஆனால் இங்குதான் தற்போது அதிமுகவில் சுணக்கம் ஏற்படுள்ளது. அதிமுக ஆட்சியில் பவர்புல் அமைச்சராக வலம் வந்த எஸ்.பி.வேலுமணி. கோவை மாவட்டத்தில் 10 தொகுதியிலும் அதிமுக கூட்டணியை ஜெயிக்க வைத்த தெம்பில், உள்ளாட்சித் தேர்தலையும் ஒருகை பார்க்க திட்டங்களை வைத்திருந்தார் வேலுமணி. இது தெரிந்ததும், அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவைக்கு அனுப்பினார் ஸ்டாலின். அவர் அங்கே போனதுமே வேலுமணி டோட்டல் சரண்டர். முன்பு, விடக்கூடாது என்று வீரவசனம் பேசிக் கொண்டிருந்தவர் இப்போது, “உள்ளாட்சித் தேர்தல்ல ஆளுங்கட்சி தானே ஜெயிக்கும். இதென்ன புதுசா?
இதுல நம்ம எதுக்கு தேவையில்லாம பணங்காச செலவு பண்ணிக்கிட்டு... என்று ஏட்டைத் திருப்பிப் போடுகிறாராம். “தம்பிக்கிட்ட மோதுனா ஏதாச்சும் சிக்கல்ல மாட்டிவிட்டுரும்” என்று செந்தில் பாலாஜி குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் கலக்கத்துடன் பேசும் வேலுமணி, அந்த அச்சத்தின் காரணமாகவே, அகன்ற கோவை மாவட்டம் என்ற தனது முந்தைய திட்டத்தை, தன்னுடைய தொண்டாமுத்தூர் தொகுதிக்குள் மட்டுமாக சுருக்கிக்கொண்டு விட்டாராம். வேலுமணி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து என்னை கைது செய்ய முயற்சி நடக்கிறது, நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம் என பேசினார். ஏன் அவராக முன்வந்து இவ்வாறு பேசினார் என விசாரித்தால், லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்ய நெருங்கிவருவதாக அவருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதுதான் இந்த பின் வாங்கலுக்கு காரணமாம்.