திவாகரனை இயக்குவது இவர்தான்.. அவரது பேச்சிலிருந்தே தெரியுது!! செந்தில் பாலாஜி ஓபன் டாக்
திவாகரனை இயக்குவது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிகிறது என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே நடந்துவந்த பனிப்போர் அண்மைக்காலமாக வெளிப்படையாக தெரிய தொடங்கியுள்ளது. இருதரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், கரூர் வெங்கமேடு பகுதியில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கரூர் வடக்கு நகர நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின்னர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தினகரன் மீது திவாகரன் வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். திவாகரனை இப்படிப் பேசவைத்து இயக்குவதே எடப்பாடிதான். சசிகலாவால் தான் தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். திவாகரன் வேண்டுமானால், தனியாக ஒரு கட்சி ஆரம்பிக்கட்டும். சசிகலாவினால் தற்போது பதவி பெற்றவர்கள் தனியாக பொதுக்குழுவைக் கூட்டி, சசிகலாவை கட்சியைவிட்டு நீக்கினார்கள். ஆகவே, அவருடைய விசுவாசத்தை திவாகரன் பேச்சின் அடிப்படையிலேயே தெரியவருகின்றது.
அதிமுகவையும் சின்னத்தையும் மீட்டெடுத்து தினகரன் நிச்சியம் முதல்வர் ஆவார். எனவே, திவாகரனின் பேச்சைக் கேட்டு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் செல்ல மாட்டார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மத்திய அரசிடம் தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்து வந்தார். இந்நிலையில், தினகரனின் குடும்பத்தாரையும் இயக்கிவந்தது திவாகரனின் பேச்சைவைத்தே தெரியவந்துள்ளது என செந்தில் பாலாஜி விமர்சித்தார்.