ரயில்வே, பாதுகாப்பு, துாதரகம் மற்றும் வெளியுறவு போன்ற மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் மாநில அதிகார எல்லைக்குள் வருகிறதா என்பது அறிவாலயம் நபர்களுக்கு புரியவில்லை. இது தமிழக அரசு அதிகாரிகளுக்குமா தெரியவில்லை?
நான்கு நாடுகளுக்கு மூன்று எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அனுப்ப தமிழக முதல்வர் முடிவு செய்திருப்பது திமுக அரசின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனில் சிக்கியிருக்கும தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு 3 எம்.பி.க்கள் மற்றும் ஒரு எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவை அனுப்பியுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு, மத்திய அரசு செய்ய வேண்டிய பணியை மாநில அரசு செய்ய முடியுமா என்று பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மா நில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உக்ரைன் நாட்டின் போர் சூழலில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்பதற்காக பிரதமரின் சீரிய முயற்சியில் இந்திய அரசின் வெளிவிவகார துறையும் இந்திய விமான படையும் துாதரக அதிகாரிகளும் விமான போக்குவரத்து நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. 
இந்தச் சூழலில் தமிழக மாணவர்களை மீட்க மூன்று எம்.பி. ஒரு எம்.எல்.ஏ.வை நான்கு நாடுகளுக்கு அனுப்ப முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பது அறிவாலய திமுக அரசின் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது. திமுக அரசின் ஏட்டுச் சுரக்காய் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. ரயில்வே, பாதுகாப்பு, துாதரகம் மற்றும் வெளியுறவு போன்ற மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் மாநில அதிகார எல்லைக்குள் வருகிறதா என்பது அறிவாலயம் நபர்களுக்கு புரியவில்லை. இது தமிழக அரசு அதிகாரிகளுக்குமா தெரியவில்லை? வெளியுறவு துறையில் நீண்ட அனுபவமிக்க நான்கு மூத்த அமைச்சர்கள் இந்திய அரசின் சார்பில் நான்கு நாடுகளில் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலக நாடுகளே வியக்கும்படி அனைத்து மாணவர்களையும் மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசின் மீட்பு குழு சிறப்பாக செயல்படுத்தும் வேளையில் தமிழகம் ஒரு துாது குழுவை அனுப்ப என்ன தேவை ஏற்பட்டுள்ளது? மாநிலங்களுக்கு சம்பந்தம் இல்லாத மீட்பு நடவடிக்கையிலும் தலையிட்டு மாணவர்களின் உயிரோடு விளையாட திமுக அரசு முடிவு செய்துள்ளது. எதையும் அரசியல் ஆக்கும் முதல்வரின் பொறுப்பற்ற செயல் மீட்பு நடவடிக்கைக்கு இடையூறாகவே இருக்கும்.” என்று அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
