Semmalai says Honor of Income tax Department
இந்திரா காந்தியின் ஆப்ரேசன் புளு ஸ்டார் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை எல்லாம் சுட்டு வீழ்த்தினார்கள் அதேபோல போயஸ் கார்டனிலும் செய்துள்ளனர் என எடப்பாடி அணியின் செம்மலை தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, இரண்டு லேப்டாப்கள் மற்றும் 2 பென் டிரைவ்களை அதிகாரிகள் எடுத்து சென்றதாக விவேக் ஜெயராமன் தெரிவித்தார். ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதன் பின்னணியில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் துரோகம் இருப்பதாகவும் அதற்காக அவர்கள் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் எனவும் தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். தாங்கள் கோவிலாக மதித்துவரும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதற்கு காரணம், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் அந்த வீட்டில் தங்கியிருந்ததுதான் என எடப்பாடி அணியை சேர்ந்தவர்கள் சசிகலா குடும்பத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாஜவில் கைக்கூலியாக மாறி அம்மா வாழ்ந்த கோவிலில் ரெய்டுக்கு ஒத்துழைத்தது இடப்படியும் பன்னீரும் தான் என தினகரன் அணியில் உள்ளவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சோதனை குறித்து பேசியுள்ள ஓபிஎஸ் அணியை சேர்ந்த மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் சேர்ந்தே உள்ளது என கூறியுள்ளார். இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி பஞ்சாப் பொற்கோவிலில் தீவிரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார்கள் என்று தகவல் அறிந்ததும் ராணுவத்தை அனுப்பி ஆப்ரேசன் புளு ஸ்டார் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை எல்லாம் சுட்டு வீழ்த்தினார்கள் ஆயுதங்களை கைப்பற்றி தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் இந்திரா காந்தி.
அன்று இந்திரா காந்தியின் அந்த நடவடிக்கையை பாராட்டியவர்களும் உண்டு, கண்டித்தவர்களும் உண்டு. அதைப்போல இந்த வருமான வரித்துறை சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது என்றார் செம்மலை. வருமான வரித்துறையினரின் நோக்கம் நல்ல நோக்கமாக இருந்தால் அதை வரவேற்கலாம். அதே நேரத்தில் அரசியல் காரணமாக இருந்துவிடக் கூடாது என தெரிவித்தார்.
