மக்கள் மனங்களில் உயர்ந்த செம்மலை… தூக்கிவைத்து கொண்டாடிய சேலம் மக்கள்…

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் குழப்பத்துக்குப் பின் சொந்த தொகுதி திரும்பிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலைக்கு சேலம் மாவ்ட்ட மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஓபிஎஸ்க்கும் சசிகலாவுக்கும் இடையே நடைபெற்ற அதிகாரப் போட்டியில் ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியை இழந்தார். இந்நிலையில் இரண்டாக உடைந்து போன அதிமுக முதலமைச்சர் பதவியை கைப்பற்ற பெரும் போராட்டம் நடைபெற்றது.

இதில் சசிகலா தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை கூவத்தூர், தனியார் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த எம்எல்ஏக்களில் மிகவும் முக்கியமானவர்,மேட்டூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ செம்மலை. அ.தி.மு.க., அமைப்பு செயலாளராகவும் இருந்த அவர், கூவத்தூர் விடுதியில் இருந்து தப்பி, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று, மேட்டூர் தொகுதிக்கு வந்த அவரைஅதிமுக தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் வரவேற்று, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேச்சேரி மற்றும் மேட்டூரில் முக்கிய வீதிகள் வழியாக, செம்மலையை ஊர்வலமாக அழைத்துக் சென்ற பொது மக்கள் அவரை தோளில் தூக்கிவைத்து கொண்டாடினர்.

இதனையடுத்து சட்டசபை அலுவலகத்திற்கு வந்த செம்மலை பன்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் மிரட்டப்பட்டனர் என்றும் அங்கு, நான் தங்கி இருந்த அறை சாவி இன்னும் என்னிடம் தான் உள்ளது என்றும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தற்போது பினாமி முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். தற்காலிக ஆட்சி, பினாமி முதலமைச்சர், குடும்ப அரசியல் மீதான அதிருப்தியால், பல எம்எல்ஏக்கள் சசிகலா அணியை விட்டு வெளியேறுவார்கள் எனவும் மீண்டும், தமிழகத்தில் பன்னீர்செல்வம், தீபா தலைமையில் புதிய ஆட்சி மலரும் என்றும் செம்மலை தெரிவித்தார்.