"அரசை விமர்சிக்க கமலுக்கு என்ன தகுதி உள்ளது?" - செல்லூர் ராஜு கேள்வி
நடிகர் கமலஹாசன் விளம்பரம் தேடுவதற்காகவே பேசி வருகிறார் என்றும், ஒரு நாலாந்தர பேச்சாளராகவேஅவர் இருக்கிறார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடக்கிறது என்று நடிகர் கமலஹாசன் சொன்னாலும் சொன்னார், அவரை தமிழக அமைச்சர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலதா உயிருடன் இருக்கும்வரை வாய் திறக்காமல் இருந்த கமலஹாசன், தற்போது தேவையில்லாமல் அரசை குற்றம்சாட்டுவதாக தெரிவித்தார்.
தமிழக அரசைக் குறித்து விமர்சனர் செய்ய கமலஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.
விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது அந்தப்படம் வெளியாக உதவி செய்தவர் ஜெயலலிதா என்பதை கமலஹாசன் மறந்துவிடக் கூடாது என சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
இப்படி அதிமுக அமைச்சர்கள் கமலஹாசனை கலந்துகட்டி அடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, சினிமாவில் வாய்ப்பில்லாததால், கமலஹாசன் தமிழக அரசுக்கு எதிராக பேசி விளம்பரம் தேடுவதாக குற்றம்சாட்டினார்.
அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாததால்தான் டிவிக்கு வந்துள்ளார் என்றும் அவர் நாலாந்தர பேச்சாளர் போல் பேசுகிறார் என்றும் தெரிவித்தார்.
எந்த இடத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதை உரிய ஆதாரத்துடன் கமல் நிரூபிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழக அரசை விமர்சனம் செய்ய கமலஹாசனுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.