இதே பொழப்பா போச்சு! செத்தவங்க திரும்பி வர மாட்டாங்க என்பதால் அடிச்சுவிடும் சீமான்! கொதிக்கும் செல்வப்பெருந்தகை
சீமான் அவர்கள், ஒரு காலத்தில் பெரியாரிய கொள்கையில், சிந்தனையிலிருந்த போது திருமகன் ஈவெரா அவர்களை சந்தித்து இருக்கலாம். நட்பு ரீதியாக பழகியிருக்கலாம். ஆனால், அவரது கட்சியில் இணைவது பற்றி கண்டிப்பாக ஒருபோதும் பேசியிருக்கமாட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா நாம் தமிழர் கட்சியில் இணைவதற்கு விரும்பினார் என சீமான் பேசியதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்து, மக்களுக்கு சேவையாற்றி மறைந்த திருமகன் ஈவெரா அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக, என்னுடைய நட்பு வட்டாரங்களில் மிகவும் முக்கியமானவர், என்னுடைய உற்ற நண்பர் என்பது தமிழ்நாட்டிலுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அவர் என்னிடம் அனைத்து விஷயங்களையும் பரிமாறிக்கொள்வார். ஆனால். ஒருபோதும் சீமான் அவர்களைப் பற்றியோ, அவரது கட்சியை பற்றியோ என்னிடம் கூறியதில்லை.
சீமான் அவர்கள், ஒரு காலத்தில் பெரியாரிய கொள்கையில், சிந்தனையிலிருந்த போது திருமகன் ஈவெரா அவர்களை சந்தித்து இருக்கலாம். நட்பு ரீதியாக பழகியிருக்கலாம். ஆனால், அவரது கட்சியில் இணைவது பற்றி கண்டிப்பாக ஒருபோதும் பேசியிருக்கமாட்டார். மேலும், அவருடைய தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் எதுவும் செய்யவில்லை என்று போகிற போக்கில் அபாண்டமாக பழி சுமத்தியிருக்கிறார் சீமான். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் திருமகன் ஈவேரா அவர்களை பற்றி கேட்டால் அவரின் உயர்வான தன்மை குறித்து சீமான் அவர்களால் விளங்கிக் கொள்ளமுடியும்.
ஆனால், சீமான் அவ்வாறெல்லாம் செய்யக்கூடிய அறிவாளி அல்ல. எப்போதும் சீமான் இறந்து போனவர்கள் பற்றியும், அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பதனால் இதுபோன்ற கருத்துக்களை கூறிவருவதே இவரது வாடிக்கையாகிவிட்டது. இதுதான் இவரின் லட்சணம். இதே போன்று சீமானின் பொறுப்பற்ற பேச்சுக்கள் குறித்து சமூக ஊடகங்களால் எவ்வளவு விமர்சிக்கப்பட்டாலும் அவர் தன்னை திருத்திக்கொள்ளமாட்டார்.
இதற்கு பின்பும் மறைந்தவர்களை குறித்து உண்மைக்கு புறம்பாக அவர்கள் சொல்லாத செய்திகளை பேசாமல் இருக்கவேண்டும். ஊடக வெளிச்சத்திற்காகவும், தன்னை முன்னிலை படுத்துவதற்காகவும், இது போன்ற கருத்துக்களை கூறி வரும் சீமான் அவர்களுக்கு எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.