சாட்டை துரைமுருகனின் கைதை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள் திமுக வழக்கறிஞர்கள். ஆனால், மாரிதாஸின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்?

மாரிதாஸ் வழக்கில் மேல் முறையீடு செய்யாத திமுக அரசுதான் உண்மையான சங்கிகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காலில் கிடந்த செருப்பை கழற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை அம்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது சாட்டை துரைமுருகன், மாரிதாஸ் விவகாரத்தை ஒப்பிட்டு திமுகவை கடுமையாகச் சாடினார். “மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் யாருமே ஆஜராகவில்லை. நான்கே நாட்களில் வழக்கில் இருந்து வெளியே வந்துள்ளார். இது தமிழக அரசுக்கு பெரிய அவமானம். சாட்டை துரைமுருகனின் கைதை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள் திமுக வழக்கறிஞர்கள். ஆனால், மாரிதாஸின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? அப்படி என்றால் யார் சங்கிகள்? திமுகதான் உண்மையான சங்கிகள்” என்று விமர்சனம் செய்தபோது ஆவேசத்தில் திடீரென்று தனது காலில் இருந்த செருப்பை கழட்டி மேடையிலேயே காட்டினார்.

இதன் காரணமாக மேடையிலும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து பேசிய சீமான், “நான் ஜனநாயகவாதியாக இருக்க வேண்டியதை பார்த்துக் கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு. என்னை வெறியனாக மாற்றிவிட வேண்டாம்.” என்றும் சீமான் பேசினார். நினைவஞ்சலி நிகழ்ச்சியில் சீமான் செருப்பைக் கழற்றி காட்டி பேசியதும், வெறியனாக என்னை மாற்றிவிட வேண்டாம் என்று பேசியதும் சர்ச்சையாகி உள்ளது. மாரிதாஸ் கைது செய்யப்பட்டபோது முதல் ஆளாக அதற்கு கடும் கண்டனம் செய்தவர் சீமான். நாம் தமிழர் கட்சியை பாஜகவின் பி டீம் என்று ஏற்கெனவே விமர்சிப்பவர்கள், மாரிதாஸ் விவகாரத்தில் சீமானின் கருத்தை வைத்து இன்னும் அவரை காட்டமாக விமர்சித்தனர்.

இந்நிலையில் சீமான் செருப்பைக் கழற்றி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.