ஜிஎஸ்டி குறித்து பொதுமேடையில் விவாதிக்க தயாரா? பாஜக தலைவர்களுக்கு சீமான் சவால்..!
பல்வேறு பிரச்னைகளைக் கடந்து விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. மெர்சல் திரைப்படம் வெளியானபிறகும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்துவருகிறது.
மத்திய அரசின் திட்டங்களான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, டிஜிட்டல் இந்தியா திட்டம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றிற்கு எதிரான வசனங்களும் காட்சிகளும் மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை எம்.பி இல.கணேசன் ஆகிய பாஜக தலைவர்கள், மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலான உண்மைக்குப் புறம்பான வசனங்களை மெர்சல் திரைப்படத்திலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி தொடர்பான வசனத்தை நீக்க மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் முரளி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், இதுதொடர்பாக சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கிற மெர்சல் திரைப்படத்தைக் கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட அமைப்பினரும், அப்படத்தில் வரும் வசனத்திற்காகப் பாஜக மற்றும் சில மதவாத அமைப்புகளும் எதிர்ப்புணர்வோடு அணுகுவதை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சியை முடக்கிப்போடும் பிழையான பொருளாதாரக் கொள்கைகளை மாற்றக்கோராமல் மெர்சல் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிற மதிப்பிற்குரிய தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்களை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்தான ஒரு பொது விவாதத்திற்கு அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளார். மக்கள் முன் ஜி.எஸ்.டி குறித்தான குளறுபடிகளைத் தீமையை ஆதாரத்துடன் நான் பட்டியலிடுகிறேன். நீங்கள் நன்மைகளைப் பட்டியலிடுங்கள். மக்கள் தீர்ப்பெழுதட்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதமர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் இலவசமான சமமான தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் கருத்துத்தான் மெர்சல் படத்திலும் இடம்பெற்றிருக்கிறது என சீமான் தெரிவித்துள்ளார்.
சீமானின் ஓபன் சேலஞ்சை ஏற்றுக்கொண்டு ஜிஎஸ்டி குறித்து சீமானுடன் விவாதிக்க பாஜக தலைவர்கள் தயாராக இருக்கிறார்களா? என்பதைப் பார்ப்போம்.