உளவுத்துறை கொடுத்த ரகசிய அறிக்கை... அடுத்த அதிமுக புள்ளி இவர்தானா..?
தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலத்திலும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக உளவுத்துறை ரகசிய அறிக்கை கொடுத்துள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர்கள் செய்த முறைகேடு தொடர்பாக தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலகலத்து தவிக்கிறாராம். சாதாரண வார்டு பிரதிநிதியாக இருந்தவர், படிப்படியாக வளர்ச்சி பெற்று, கடந்த 10 ஆண்டுகள் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவர்.
இத்துறையில் நடந்த முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது, கடந்த 10 ஆண்டு காலம் தனக்கென ஒரு தனி வட்டத்தை உருவாக்கி தனது செல்வாக்கை பல மடங்கு உயர்த்தியதாகவும், அந்த வட்டத்திற்குள் குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் உள்ளே வராதபடி பார்த்துக்கொண்டார் என்றும் அவர் மீது புகார் எழுந்துள்ளது. ஆட்சி அதிகாரத்திலும் குடும்ப உறுப்பினர்கள் அதிகாரம் கொடிக்கட்டி பறந்ததாம். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.2,393 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கியதிலும், கூட்டுறவுத்துறையில் சாக்கு ஏலத்திலும், சிறுவணிக கடன், நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட இத்துறையில் நடந்த பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் கிடைத்த வருமானத்தில், அவர் தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலத்திலும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக உளவுத்துறை ரகசிய அறிக்கை கொடுத்துள்ளது. இதனால் எப்போது என்ன நடக்குமோ என பதற்றமாகவே இருக்கிறார். இதில் இருந்து தப்பிக்க கட்சியின் சட்ட ஆலோசனை குழுவையும் நாடி வருகிறாராம். அதே சமயம் அவரால் பயனடைந்தவர்கள் எங்களை எங்கே காட்டி கொடுத்துவிடப்போகிறாரோ என்ற பயத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.